
‘’ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்பட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் வீடியோ பதிவுகளை நிறைய காண நேரிட்டது. இது உண்மையா எனும் சந்தேகத்தில் ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Video Link |
Sinthu Sinthu Raj Rana என்பவர் அக்டோபர் 27, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதேபோல பலரும் சிறுவன் சு(ர்)ஜித் மீட்கப்படும் வீடியோ என்று கூறி இந்த வீடியோ காட்சியை வைரலாக பகிர்ந்ததை காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள வீடியோ தவறான ஒன்றாகும். இதனை பலரும் நாம் ஆய்வு செய்யும் பதிவின் கமெண்ட்டிலேயே சுட்டிக்காட்டியுள்ளனர். இருந்தும் அதனை அகற்றாமல் சம்பந்தப்பட்ட நபர் அப்படியே வைத்துள்ளார்.
இது உண்மையில் ஆந்திராவில் கடந்த 2017ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் வீடியோ காட்சியாகும். உண்மையான வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் 1.30 நிமிடத்திற்கு மேல் நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் உள்ள காட்சிகள் அப்படியே மாறாமல் இடம்பெற்றுள்ளதை காண முடிகிறது.
சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்றபோது, இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்து, இது தவறான தகவல் என டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
TOI News Link | Pune Mirror News Link |
கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஆந்திரா மாநிலம் குண்டூரில் உள்ள வினுகொண்டா பகுதியில் 2 வயது சிறுவன் 20 ஆடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட ஒரே இரவில் அவனை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) 11 மணிநேரம் போராடி உயிருடன் மீட்டுத்தனர். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போதைய நிகழ்வுடன் சேர்த்து தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
TheNewsMinute Link | IndiaToday Link | TheHindu Link |
உண்மையில், தமிழக சிறுவன் சுஜித்தை 80 மணிநேரத்திற்கும் மேலாக போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை. ஆழ்துளை கிணற்றில் விழுந்த மறு நாளே சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் சடலத்தை பெரும் போராட்டத்திற்கு இடையே மீட்புக் குழுவினர் மீட்டெடுத்தனர். அது மட்டுமின்றி சிறுவனின் சடலத்தைக் கூட வெளியில் காட்டாமல் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது.
இதுபற்றிய விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, கொந்தளிப்பான சூழலில் கையில் கிடைத்த வீடியோவை தரவுகளை சரிபார்க்காமல் உடனடியாக, சுஜித் விவகாரத்துடன் இணைத்து பகிர்ந்துள்ளனர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் மீட்கப்பட்ட வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
