
‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வரும் விவரம் கிடைத்தது.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் என்பதால் கோயிலுக்குள் நுழைந்த சிறுவனை மற்றொரு ஜாதியை சேர்ந்த நபர் அடித்தே கொன்றதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இத்தகைய சூழலில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியும் வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்ற சந்தேகத்தில், அதில் உள்ள புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது 2017ம் ஆண்டில் பாகிஸ்தானில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பானது என்ற விவரம் கிடைத்தது.
இதன்படி, 2016 முதலாகவே, இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். குடும்ப பகை காரணமாக, அவரை மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்தியுள்ளனர். இதன்பேரில், குற்றவாளிகளை போலீசார் அப்போதே கைது செய்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை எடுத்து சிலர் மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அநீதி என்று கூறி பகிர்ந்திருக்கின்றனர் (இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்). அதன் பிறகு, தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்த அநீதி என்று கூறி வதந்தி பரப்பி வருகின்றனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தானுடன் தொடர்புடைய பழைய புகைப்படத்தை எடுத்து, உத்தரப் பிரதேசத்துடன் தொடர்புபடுத்தி தற்போது வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா?
Fact Check By: Pankaj IyerResult: False
