
‘’பட்டப்பகலில் மரத்தின் உச்சியில் பேய் நிற்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Video Link |
Dhinesh Dhinesh என்பவர் ஓராண்டுக்கு முன்னர் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதில் மரத்தின் உச்சியில் பெண் போன்ற ஒருவர் நிற்க, அதனை கீழே நின்று நிறைய பேர் வேடிக்கை பார்க்கின்றனர். பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்திருக்கின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ பற்றி இணையத்தில் நீண்ட நேரம் தேடியபோது, சில விவரங்கள் கிடைக்கப்பெற்றன. இதன்படி, வீடியோவில் இருப்பது பேய் இல்லை என்றும், அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் தெரியவருகிறது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதுதொடர்பாக Kalinga TV வெளியிட்ட யூ டியுப் செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வீடியோ செய்தியில், ‘’மரத்தில் இருப்பது பேய் அல்ல, அவர் மன அழுத்தத்திற்கு ஆளான பெண், அடிக்கடி மரத்தில் ஓடி ஏறுவதும், உள்ளூர் மக்களை தாக்குவதும் அவருக்கு பழக்கமாக இருந்துள்ளது. இதன்பேரில் கட்டாக் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார்,’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை வீடியோவின் கீழேயே ஒருவர் மொழிபெயர்த்து கமெண்ட் பகிர்ந்துள்ளார்.
இதுதவிர மேற்கண்ட ஃபேஸ்புக் வதந்தி தொடர்பான முழு வீடியோ ஒன்றும் யூ டியுப்பில் காண கிடைத்தது. அதில், மரத்தில் ஏறிய பெண்ணை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கீழே அழைத்து வருவதையும், அவர் புலம்பி அழுவதையும் காண முடிகிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இறுதியாக, மேற்கண்ட சம்பவம் உண்மையிலேயே ஒடிசாவில் நிகழ்ந்ததா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய நமது ஒடிசா மாநில நண்பர் வழியே முயற்சித்தோம். இதன்படி, முதலில் சம்பந்தப்பட்ட பிடல் கிராமம் அமைந்துள்ள ஒடிசாவின் சுந்தர்கார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நமது ஒடிசா நண்பர் தொடர்புகொண்டு பேசினார். அவர் தகவல் தருவதாகக் கூறினாலும், தொடர் பணிச்சுமை காரணமாக உள்ளூர் போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி கூறியிருக்கிறார். இதையடுத்து, உள்ளூர் போலீசில் பேசியபோது பழைய சம்பவம் என்பதால் விவரம் தேடிப் பார்க்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
இப்படியாக, 2 நாள் சென்ற நிலையில், ஒருவழியாக, பிடல் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகச் செயல்படும் நபரிடம் நமது நண்பர் பேசியிருக்கிறார். அதற்கு அவர், ‘’இச்சம்பவம் உண்மைதான். குடும்ப விவகாரம் காரணமாக, சம்பந்தப்பட்ட பெண், கடந்த 2017ம் ஆண்டு இப்படி பேய் பிடித்தது போல ஆவேசமாக நடந்துகொண்டார். முதலில், தனது கணவன் குடும்பத்தினரை தாக்கிய அப்பெண், திடீரென ஓடிச் சென்று அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டார். பலர் அவரை பேய் என நினைத்து பயந்துவிட்டனர். பிறகு அவரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் ஆண்கள் ஒன்று சேர்ந்து பத்திரமாக மீட்டோம்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,
1) மரத்தில் நிற்பது பேய் இல்லை, அவர் ஒடிசாவைச் சேர்ந்த பெண் ஆவார்.
2) ஒடிசா மாநிலம், பிடல் கிராமத்தில் 2017ம் ஆண்டு இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
3) குடும்பச் சண்டை காரணமாக அப்பெண் மரத்தின் மீது ஏற, அதனை வீடியோ எடுத்த சிலர் பேய் எனக் கூறி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பட்டப்பகலில் மரத்தின் உச்சியில் பேய் நிற்கும் வீடியோ: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
