கரூரில் பிரசார வாகனத்தின் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று பரவும் தகவல் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணமான விஜய்யின் பிரசார கூட்டத்தில், வாகனத்தில் லைட்டை ஆன், ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் விஜய் பிரசார வாகனத்திற்குள் மின் விளக்குகளை ஆன், ஆஃப் செய்தபோது ரசிகர்கள் உற்சாகமாகும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விமர்சித்து ரசிகர்களின் உற்சாகத்தைக் கண்டு நடிகர் விஜய் ரசிக்கும் செயலை விமர்சித்து ஒருவர் பேசுகிறார். யார் இதை கூறினார்கள் என்று இல்லை.

நிலைத் தகவலில், “கரூரில் நடந்த பிரச்சார வாகனத்தில் Light On/ Off செய்து விளையாடிய நடிகர் விஜய்.

ரசிகர்களின் ஆரவாரத்தை அணு அணுவாக ரசித்துப் பார்த்த மகிழ்ந்த அரசியல்வாதி விஜய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்ய சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலுக்கு போலீஸ் சரியான பாதுகாப்பு அளிக்காதது, சொன்ன நேரத்திற்கு பதில் மிகத் தாமதமாக விஜய் வந்தது, பகலிலிருந்து உணவு, தண்ணீர் இன்றி அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் காத்திருந்தது என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில் மக்கள் மயங்கி விழுந்து இறந்து கொண்டிருந்த போது பிரசார வாகனத்தில் மின் விளக்குகளை on/off செய்து விளையாடிய விஜய் என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் பிரசார பயணம் தொடங்கிய போது பெரம்பலூரில் பிரசார வாகனத்திற்கு உள்ளே விளக்குகளை ஆன், ஆஃப் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வீடியோவை கரூரில் நடந்ததாகச் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

விளக்குகளை ஆன், ஆஃப் செய்த செயலை பலரும் விமர்சித்திருந்தனர். அந்த நேரத்தில் விஜய் அமர்ந்திருந்த நிலை, ரசிகர்களை அவர் பார்த்த விதத்தை வைத்து விஜய்யின் மனநிலையைப் பலரும் விமர்சித்திருந்தனர். கரூரில் நடந்ததாக குறிப்பிடவில்லை. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலோ இந்த செயல் கரூர் பிரசார கூட்டத்தில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

நியூஸ் 18 வெளியிட்டிருந்த வீடியோவை அதன் சமூக ஊடக பக்கங்களில் இருந்து எடுத்தோம். செப்டம்பர் 14, 2025 அன்று அந்த வீடியோவை நியூஸ் 18 வெளியிட்டிருந்தது. கரூர் பிரசாரமோ செப்டம்பர் 27, 2025 அன்று நடந்தது. அதாவது, லைட்டை ஆன், ஆஃப் செய்து விளையாடியதற்கு இரண்டு வாரங்கள் கழித்துத்தான் கரூர் கூட்டமே நடந்துள்ளது. இதன் மூலம் இந்த வீடியோ 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.

முடிவு:

கரூர் பிரசாரத்தின் போது வாகனத்திற்குள் விளக்குகளை ஆன்/ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று பரவும் வீடியோ செப்டம்பர் 13ம் தேதி பெரம்பலூரில் பிரசாரம் செய்ய சென்றபோது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கரூரில் பிரசார வாகனத்தின் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடிய விஜய் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False