சீனாவில் உள்ள இந்து கோவில்களை செப்பனிட ஜின்பிங் உத்தரவு?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

சீனாவில் உள்ள இந்து ஆலயங்களை செப்பனிட்டு தினமும் மூன்று வேளை பூஜைக்கு ஏற்பாடு செய்ய சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Hindu Temple 2.png
Facebook LinkArchived Link

“சீன அதிபர் ஜின்பிங் அதிரடி உத்தரவு… சீனாவில் உள்ள அனைத்து இந்து ஆலங்களையும் செப்பனிட்டு 3 வேளை பூஜைக்கு ஏற்பாடு…” என்று ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை Nanchil C Manoharan என்பவர் அக்டோபர் 15, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர்  ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி, சந்திப்பு நடக்கும் நேரத்தில், சந்திப்புக்குப் பிறகு பல வதந்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கின. எதிர்க்கட்சியினர் மட்டுமே வதந்திகளை பரப்பினார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஆதரவு நிலைப்பாடு உடையவர்களும் அதிக வதந்திகளைப் பரப்பி வருவதை சமூக ஊடகங்களில் காண முடிகிறது.

கேமரா குழுவினர் முன்னிலையில் குப்பைகளை அகற்றிய மோடி என்று மோடி எதிர்ப்பாளர்கள் வதந்தியை பரப்பினால், கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை பாகிஸ்தானியர்கள் டிரெண்ட் செய்கிறார்கள் என்று தொடங்கி, கோ பேக் மோடி பதிவிட்டவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று பல வதந்திகளை மோடி ஆதரவு தரப்பினரும் சமூக ஊடகங்களில் பரப்பியதை காண முடிந்தது. அந்த வகையில் தற்போது அடுத்த வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

சீனாவில் உள்ள இந்து ஆலயங்களை செப்பனிட்டு மூன்று வேளை பூஜை நடக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டார் என்பதுதான் அது. அப்படி அவர் உத்தரவிட்டு இருந்தார் என்பதை உறுதி செய்ய எந்த ஒரு செய்தி, வீடியோ, பத்திரிகை இணைப்பையும் அவர்கள் அளிக்கவில்லை.

சீனாவில் மத கட்டுப்பாடு அதிகம். பெரும்பான்மையாக உள்ள புத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு ஏற்படுத்தி வருகிறது. உய்கர் இஸ்லாமியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை செப்பனிட்டு அங்கு பூஜை நடத்த எப்படி உத்தரவிட்டிருப்பார் என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது.

vikatan.comArchived Link 1
tamil.oneindia.comArchived Link 2
bbc.comArchived Link 3

மாமல்லபுரம் வந்து சென்ற பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல சமூக ஊடகங்களில் வேறு சிலர் பதிவிட்டிருந்தனர். இது உண்மையா? செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா? என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

Hindu Temple 3.png
Facebook LinkArchived Link

சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்து கோவில்களை சீரமைக்கவும் மூன்று வேளை பூஜை நடத்தவும் அதிபர் உத்தரவிட்டுள்ளது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அதில் எப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. சீன அதிபர் இந்தியா, நேபாளம் வந்து சென்றது தொடர்பான செய்திகள் மட்டுமே நமக்கு கிடைத்தன. 

Search Link 1Search Link 2

கோவில்களை சீரமைக்க முடிவு எடுத்தார் என்று ஏதேனும் செய்தியாவது வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீனாவில் உள்ள இந்து கோவில்களை செப்பனிட ஜின்பிங் உத்தரவு?

Fact Check By: Chendur Pandian 

Result: False