
மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என்று பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
எஸ்.எஸ்.சேகர் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு பதிவு பகிரப்பட்டுள்ளது. நியூஸ் கார்டு பகுதியில், “S.R.சேகர் சர்ச்சை பேச்சு. மோடி தமிழகத்திற்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிட கூடாது. மோடி வரும் போது அசைவம் சாப்பிடுகிறவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள். எஸ்.ஆர்.சேகர் பாஜக” என்று இருந்தது.
இதற்கு கீழே, “மோடி மனைவியுடன் வாழ்வதற்கு முடியாது. அதனால் இந்தியர்கள் அனைவரும் அவனவன் பொண்டாட்டியை மோடியைப்போல் நடுரோட்டில் கழட்டிவிட்டு இந்தியாவில் இருங்கள். விரைவில்..” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “இவரின் இந்த பேச்சு உண்மையானால் கண்டிக்கப்பட வேண்டும்” என்று இருந்தது. இந்த பதிவை Mohamed Rafi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவலை, போலி செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருபவர் தமிழக பா.ஜ.க-வின் பொருளாளராக உள்ள எஸ்.ஆர்.சேகர். அமைச்சர் அன்பில் மகேஸ் பற்றி தவறான தகவலை பரப்பியதாக அவர் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அவரை வைத்தே போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.
நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், டிசைன் என அனைத்தும் இது போலியானது என்பதை உறுதி செய்கின்றன. இருப்பினும் இதையும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை செய்தோம்.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள் இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூறியதாக ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவியது. அது பற்றியும் நாம் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதே நியூஸ் கார்டை கூடுதலாக எடிட் செய்து இந்த போலியான நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அண்ணாமலை படத்தில் அண்ணாமலைக்கு பதில் பிரதமர் மோடி, எஸ்.ஆர்.சேகர் படத்தை வைத்து எடிட் செய்துள்ளனர்.

அண்ணாமலை படத்தின் பின்னணியிலிருந்த விஷயங்கள் அனைத்தும் எஸ்.ஆர்.சேகர் பற்றிய பதிவிலும் இருப்பதைக் காண முடிகிறது. எனவே, அண்ணாமலையை வைத்து ஐபிசி தமிழ் என்ற ஊடகம் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டையே இவர்கள் எடிட் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய ஐபிசி தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், எஸ்.ஆர்.சேகர் பற்றி எந்த நியூஸ் கார்டையும் ஜனவரி 3, 2022 அன்று அந்த ஊடகம் வெளியிடவில்லை என்பது உறுதியானது. அண்ணாமலை தொடர்பான நியூஸ் கார்டு மட்டுமே அதிலிருந்தது.
ஐபிசி தமிழ் சோஷியல் மீடியா பிரிவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பேசினோம். அவர் ‘’இது நாங்கள் வெளியிட்டது இல்லை; போலியானது,’’ என்று உறுதி செய்தார்.
இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியானது.
முடிவு:
பிரதமர் மோடி தமிழகம் வரும் போது இந்துக்கள் அசைவம் சாப்பிடக் கூடாது, அப்படி அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பா.ஜ.க-வின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று எஸ்.ஆர்.சேகர் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
