
சென்னையில் பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்ட் என்பது கூட தெரியாமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்ததை பொது மக்கள் குழப்பத்துடன் கண்டுகளித்தனர்” என்று இருந்தது.
இந்த பதிவை Manoharan Karthik Karthik Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடந்து வரும் சூழலில், அதை வைத்து பல போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. போலியான நியூஸ் கார்டு என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மிக தத்ரூபமாக நியூஸ் கார்டுகளை பலரும் பகிர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டு என்பது கூட தெரியாமல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. நமக்கே இது உண்மையானதுதானா என்று ஒரு நிமிடம் சந்தேகம் கொள்ளும் அளவுக்கு நியூஸ் கார்டு இருந்தது.
உண்மையில் இப்படி ஏதும் நடந்திருந்தால் செய்தி மற்றும் மீம்ஸ் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியையும் பார்க்கவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம். தமிழ் ஃபாண்ட், டிசைன் எல்லாம் உண்மையானது போல இருந்தது. எனவே, முதலில் இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம். படத்தை சற்று பெரிதுபடுத்திப் பார்த்த போது, நியூஸ் 7 வாட்டர் மார்க் லோகோ எடிட் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் பிப்ரவரி 11, 2022 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அன்றைய தினத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்த அண்ணாமலை என்று நியூஸ் கார்டு ஒன்றை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம் என்ற தெரிந்தது.

எனவே, இதை உறுதி செய்ய நியூஸ் 7 தமிழ் டிவி-யின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சுகிதாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானதுதான் என்று அவர்கள் சமூக ஊடக பக்கங்களிலும் பதிவு வெளியிட்டனர்.
இப்படி ஏதேனும் சம்பவம் நடந்ததா என்று தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான எஸ்.ஜி.சூர்யாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது தவறான தகவல் என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் வேட்பாளரே இல்லாத வார்டில் வாக்கு சேகரித்த அண்ணாமலை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சென்னை மாநகராட்சியில் பாஜக போட்டியிடாத வார்டில் பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சென்னையில் பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் அண்ணாமலை வாக்கு சேகரித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
