
வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக.,வினரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் விரட்டியடித்த காட்சி, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டபோது, அதில், முதலில் பேசும் நபர், எம்.பி., தேர்தலுக்காக புது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை திமுக சார்பில் சரிபார்க்க வந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
அதன் பிறகு, அவரை சுற்றியுள்ள பொதுமக்கள், ‘’இப்பகுதியில் செயல்படும் மதுக்கடையை அகற்ற கேட்டோம். ஆனால், நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஓட்டு கேட்டு மட்டும் வருகிறீர்கள். எப்படி நியாயம்,’’ என்று பேசுகிறார்கள்.
இதனை வைத்தே, இந்த வீடியோ, தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் தொடர்புடையது இல்லை என்று தெளிவாகக் கூறலாம். ஏனெனில், தற்போது நடைபெறுவது சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். ஆனால், வீடியோவில் ‘எம்.பி., தேர்தல்’ என்று பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் எம்.பி., தேர்தல், 2019ல் நடைபெற்றது. அடுத்தப்படியாக, 2024ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், மேற்கண்ட வீடியோவை பலரும் பகிர்வதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை முதலில் Arasiyal Atrocities என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2022, டிசம்பரில் பகிர்ந்துள்ளனர். எங்கே நடந்தது என்று கூறாமல், மொட்டையாக இந்த வீடியோவை அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால், இது ஒருவேளை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்ததாக இருக்குமோ, என்று சமூக வலைதள பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பாஜக.,வை சேர்ந்த நிர்மல்குமார் உள்ளிட்ட பலரும் வேகமாக பகிர தொடங்கியுள்ளனர்.

ஆனால், இதற்குப் பதில் அளித்து, இந்த வீடியோவில் உள்ள நபர்களில் ஒருவரான திமுக கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
எனவே, சில மாதங்களுக்கு முன்பாக, கோவை மாவட்டம், சூலூர் தொகுதி கருமத்தம்பட்டி 27வது வார்டில் நடந்த நிகழ்வு ஒன்று தொடர்பான வீடியோவை தற்போது எடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஓட்டு கேட்டு வந்த திமுக.,வினரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் விரட்டியடித்தனரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Misleading
