
கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிப்ரவரி 13, 2021 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படத்துடன் வெளியான பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் ஹோட்டலில் சாப்பிடுவதால், கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Arputharaj என்பவர் 2021 பிப்ரவரி 15 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் ஏற்கனவே “நான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை அதனால் வெங்காய விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று கூறியதாக வதந்தி பரவியது. அது பற்றி ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், நான் ஹோட்டலில் சாப்பிடுவதால் கேஸ் விலை உயர்வு பற்றி கவலையில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். நிர்மலா சீதாராமன் உண்மையில் அப்படிக் கூறியிருந்தால் அது பெரிய செய்தியாகியிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில் பாலிமர் தொலைக்காட்சியில் மட்டும் எப்படி நியூஸ் கார்டு வெளியிட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் வந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
எனவே, பிப்ரவரி 13ம் தேதி வெளியான பாலிமர் டிவி நியூஸ் கார்டுகளைப் பார்த்தோம். அதில் நிர்மலா சீதாராமன் படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று ஒரு நியூஸ் கார்டு இருந்தது. அதில், “ஏழை, எளிய மக்களுக்கான அரசாகவே மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது. பெருமுதலாளிகளுக்கான ஆட்சியை நடத்தியது காங்கிரஸ் தான் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.
இதை உறுதி செய்ய பாலிமர் தொலைக்காட்சி சமூக ஊடகப் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். அவருக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தை அனுப்பி விசாரித்தோம். அப்போது அவர், ‘’இது நாங்கள் வெளியிட்டது இல்லை. எங்கள் நியூஸ் கார்டை எடிட் செய்துள்ளனர்” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேஸ் விலை உயர்வு பற்றி கவலையில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை என நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: Altered
