
பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், அதிமுக-வில் இருந்து விலகிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவிலிருந்த விலகி விடுவேன். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது; ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன். பத்திரிகையாளர் கேள்விக்கு ஜெயக்குமார் பதில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசியலில் உள்ளது. அப்படி கூட்டணி அமைத்தால் அதிமுக-வில் இருந்து வெளியேறுவேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். பார்க்க புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே உள்ளது. ஒரு நிமிடம் நமக்கே இந்த நியூஸ் கார்டு உண்மையானதாக இருக்கலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால், ஜெயக்குமார் அப்படி பேட்டி அளித்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக், எக்ஸ் தள பக்கத்தை ஆய்வு செய்தோம்.
2025 மார்ச் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இந்த நியூஸ் கார்டு வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை. ஒருவேளை வெளியிட்டுவிட்டு அகற்றிவிட்டார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இந்த நியூஸ் கார்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தவறானது, போலியானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக-வுடன் கூட்டணி வைத்தால் அதிமுக-வில் இருந்து விலகிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க-விலிருந்து விலகி விடுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
