
பீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யும்போது சிக்கிய சங்கி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நான்கு நிமிட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரை கிராம மக்கள் சுற்றி வளைத்து விசாரிக்கின்றனர். திடீரென்று காவி தலைப்பாகை கட்டிய நபர் மற்றும் சிலர் வந்து அவரை காப்பாற்ற முயல்கின்றனர். இந்தியில் பேசுவது போல உள்ளது.
நிலைத் தகவலில், “பீகார் தேர்தலில் #EVM மெஷினை instant Hack செய்யும்போது பிடிபட்ட சங்கீ 2 நிமிடத்தில் 8000 வாக்குகள் போட முடியுமாம் இதுல என்னன்னா இவன் court ள வேலைப்பக்குற ஆளாம் #EVMfraud” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை திராவிட ஒளிச்சுடர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 நவம்பர் 12ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்படுவதாக தொடர்ந்து பல கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்றார்போல முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் என்று சில வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டும் வருகின்றன.
ஆனால், வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது. அதில் முறைகேடு செய்ய முடியாது. ஹேக் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையமும் அவ்வப்போது கூறி வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவும் பல முறை அது அழைப்புவிடுத்து வருகிறது.
இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்று பா.ஜ.க ஆதரவாளர் சிக்கினார் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.
வீடியோவில் என்ன மொழியில் பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. பீகாரி மொழியா, இந்தியா என்று தெரியவில்லை. எனவே, வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால் நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்திருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். அப்படி ஏதும் வந்துள்ளதா, குறிப்பாக பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று செய்தி வந்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் மட்டுமே நமக்கு கிடைத்தன. அதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இதை பல முறை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது என்றும் தேர்தல் கமிஷன் இணை ஆணையர் சந்திப் ஜெயின் பேட்டி அளித்திருந்தார்.

அசல் பதிவைக் காண: newindianexpress.com I Archive
வீடியோவில் என்ன பேசுகிறார்கள் என்று அறிய நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவில் உள்ளவர்களிடம் இந்த பதிவை அனுப்பிக் கேட்டோம். அப்போது அவர்கள் “இது ஹரியானாவின் பரோடா தொகுதி இடைத்தேர்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோ. ரூர்கி என்ற கிராமத்தில் வாக்குப்பதிவை பா.ஜ.க-வினர் ஹேக் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்” என்று கூறினர்.
ஹேக் செய்ய வருபவர் எதற்காக தனி ஆளாக வர வேண்டும். இப்படி ஹேக் செய்யும் கருவியைக் கொடுத்து கிராமம் கிராமமாக அனுப்பினால் சிக்கிக்கொள்ள மாட்டார்களா… ஹேக் செய்ய முடியும் என்றால் அதை ரகசியமாக ஏதாவது வாகனம் மூலமாக அல்லது அந்த பூத் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி மூலமாக செய்துவிட மாட்டார்களா… அதைவிடுத்து இப்படி தனி ஆளாக அனுப்பி பிரச்னையில் சிக்கிக் கொள்வார்களா என்று பல கேள்விகள் எழுந்தன.
அதே நேரத்தில் கையில் இயந்திரத்துடன் அந்த இளைஞர் என் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும் என்றும் கேள்வி எழுந்தது.
ஆங்கிலத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் ஹேக்கிங் என்று பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால் நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்தியில் இந்த கீ வார்த்தைகளை கூகுளில் மொழிமாற்றம் செய்து தேடினோம். அப்போது இந்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
amarujala.com என்ற ஊடகத்தில் வெளியான செய்தியில், “இளைஞர்கள் சிலர் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு வெளியே நின்று கொண்டு வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு ஸ்லிப்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: amarujala.com I Archive 1 I haribhoomi.com I Archive 2 I bhaskar.com I Archive 3
மொபைல் போனில் வாக்காளர் பெயர்களை கண்டறிந்து, அதை வைஃபை மூலமாக கையடக்க பிரிண்டரை பயன்படுத்தி ஸ்லிப் கொடுத்துக் கொண்டிருந்தனர். இதை கண்டு சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வதாக கருதி அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். சிலருக்கு அடியும் விழுந்துள்ளது.
கடைசியில் போலீசார் வந்து விசாரித்த போது, அவர்கள் வெறும் ஸ்லிப் மட்டும் வழங்கியது தெரியவந்தது. ஸ்லிப் வழங்கும் வழிமுறையை அவர்கள் செய்து காட்டிய பிறகு அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இ-ஸ்லிப்பை ரிவாடா கிராமத்தில் மட்டுமின்றி கத்வால், நிஸாம்பூர், ரூக்கி உள்ளிட்ட பல கிராமங்களில் வழங்கியுள்ளனர் என்று இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ ரூக்கி கிராமத்தின் பெயரை ஒருவர் கூறுவதைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. வாக்காளர் ஸ்லிப் எப்படி பிரிண்ட் செய்யப்படுகிறது என்பது பற்றிய ஒரு வீடியோவும் நமக்கு கிடைத்தது.
பீகார் தலைமை தேர்தல் அதிகாரி ஶ்ரீனிவாசை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ குழு தொடர்புகொண்டு விசாரித்தது. அதற்கு அவர், “வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை” என்றார்.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சார்பில் பீகார் மாநில டிஜிபி-யிடம் வாக்குப்பதிவு ஹேக் செய்யப்பட்டதாக ஏதேனும் குற்றச்சாட்டு வந்ததா என்று விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படி எந்த ஒரு சம்பவமும் இந்த மாநிலத்தில் நடைபெறவில்லை. அப்படி முறைகேடு நடக்கிறது என்று எந்த ஒரு புகாரும் எங்களுக்கு வரவில்லை. அப்படி யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால், அது பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தால் உடனடியாக அந்த குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருக்கிறோம்” என்றார்.
இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் (malayalam.factcrescendo.com) வெளியான செய்திக் கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஹரியானாவில் அப்படி ஏதும் நடந்ததா என்று இந்தி ஊடகம் ஒன்று சோனிபட் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் நிகிதா கட்டாரை தொடர்புகொண்டு கேட்டுள்ளது. அப்போது வாக்குப்பதிவு ஹேக் செய்யப்படுகிறது என்று வெளியான தகவலை அவர் மறுத்ததாக தெரிவித்திருந்தனர்.
ஹரியானா மாநிலம் பரோடா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்து ராஜ் என்பவர் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய ஆய்வில், இந்த வீடியோ ஹரியானா மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.
வாக்குப்பதிவுக்கான ஸ்லிப்பை வழங்கியதை வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படுவதாக கிராம மக்கள் கருதியதால் பிரச்னை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஹரியானாவில் பூத் ஸ்லிப் கொடுத்ததை ஹேக் செய்வதாக நினைத்து எடுக்கப்பட்ட வீடியோவை பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்ட போது எடுத்து என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்த பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
