FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ராணுவ அதிகாரி தாக்கப்பட்டாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் தாக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கிய ராணுவ அதிகாரி மற்றும் கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக கட்டுப் போட்ட சீக்கியர் ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், “இரண்டு புகைபடத்தில் இருப்பவர் ஒருவரே எல்லைபாதுகாப்பு படை கேப்டன் PPS திலன்சஹேப் ஓய்வு பெற்ற போதும் விவசாயிகளின் உரிமைக்காக போராடும் போது அதிகார வர்க்கத்தின் கைக் கூலிகளால் தாக்கப்பட்டும் விவசாயிகளின் பாதுகாவலனாக போராடும் தங்களுக்கு ராயல் சல்யூட் 💪💪” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Pravin Kumar என்பவர் 2020 டிசம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல தகவல்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அதில் பல தகவல் தவறாகவே உள்ளன.

இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். படத்தில் உள்ளவர்களை தனித்தனியாகப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ராணுவ அதிகாரி படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது படத்தில் இருப்பவரின் மகன் சுக்விந்தர் (Sukhwinder Singh Sarpanch Uboke) ராணுவ வீரர்களின் பொதுவான ஃபேஸ்புக் குழு பக்கத்தில் வெளியிட்ட பதிவு நமக்கு கிடைத்தது.  2020 நவம்பர் 29ம் தேதி இரவு 10 மணிக்கு படம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. 

அதில் என்னுடைய தந்தையின் பிறந்தநாள். என் தந்தை கேப்டன் பிரதாப்பால் சிங் தில்லான் 1993ம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 1965, 71 மற்றும் 1989 (இலங்கை அமைதிப் படை) போர்க் களத்தில் பணியாற்றினார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது, விவசாயிகள் போராட்டம் நடந்த போது இவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியதாக பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

சுக்விந்தரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தந்தையுடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். அந்த படம் நவம்பர் 29 மாலை 5.30க்கு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இரண்டாவதாகக் கண்ணில் கட்டுப் போட்டுள்ள விவசாயி படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பிறந்த நாள் கொண்டாடிய ராணுவ அதிகாரி பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அதே நவம்பர் 29, 2020 அன்று இந்த புகைப்படமும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண:  Twitter I Archive

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, போராட்டத்தில் பங்கேற்றும் அடியும் வாங்கினார் என்பது நம்பும் படி இல்லை. பிறந்தநாள் அதுவுமாக தன் தந்தை தாக்கப்பட்டிருந்தால் அது பற்றி குறிப்பிடாமல் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான பதிவை மகன் வெளியிடுவாரா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், காயம் அடைந்த விவசாயி  தான் தாக்கப்பட்டது எப்படி என்று விளக்கம் கொடுக்கும் வீடியோவும் நமக்கு கிடைத்தது. இதுவும் இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதை உறுதி செய்தது.

https://twitter.com/AMITKUM930/status/1332884431938281477

Archive

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலம் சார்பில் கேப்டன் பிரதாப் பால் சிங் தில்லானின் மகன் சுக்விந்தரிடம் பேசினோம். அப்போது அவர், “என்னுடைய தந்தை போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் வீட்டில்தான் உள்ளார்” என்று உறுதி செய்தார்.

போராட்டத்தில் பங்கேற்றுக் காயமுற்ற சீக்கியரின் பேரன் தேஜ்பால் சிங் ஓட்டாலிடம் ஃபேக்ட் கிரஸண்டோ சார்பில் தொடர்புகொண்டு விசாரிக்கப்பட்டது. அப்போது அவர், “காயம் அடைந்த அந்த விவசாயி என்னுடைய தாத்தா பல்வந்த் சிங் ஓட்டல். சமூகவலைத்தளங்களில் தவறாக என்னுடைய தாத்தாவின் படத்தை ராணுவ அதிகாரியின் படத்துடன் சேர்த்துப் பகிர்ந்து வருகின்றனர். 

இருவரின் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி இப்படி செய்துள்ளனர். என்னுடைய தாத்தா விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றார். ஹரியானா – பஞ்சாப் எல்லையில் அவர் தாக்கப்பட்டார். அவருக்கு தையல் போட்டுள்ளனர். இதனால் அவரை திரும்பவும் வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். நான் போராட்ட களத்தில் உள்ளேன்” என்றார்.

ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில் பிறந்த நாள் கொண்டாடிய ராணுவ அதிகாரியின் படமும், காயம் அடைந்த விவசாயியின் படமும் சமூக ஊடகங்களில் ஒரே நாளில் வெளியிடப்பட்டுள்ளது. இருவரின் தோற்ற ஒற்றுமையைப் பயன்படுத்தி ராணுவ அதிகாரி தாக்கப்பட்டார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இருவரின் குடும்பத்தினரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உருவ ஒற்றுமையை பயன்படுத்தி இரு வேறு நபர்களின் படத்தை ஒன்று சேர்த்து தவறான தகவல் அளித்து சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற ராணுவ அதிகாரி தாக்கப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False