காங்கிரசுடன் அதிருப்தி காரணமாக மோடியை சந்தித்த ஜார்கண்ட் முதல்வர் என்று பரவும் புகைப்படம் – உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன் மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#ஜார்கண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரனும், அவரது மனைவியும் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive

சில பதிவுகளில் சிபு சோரன் மறைவின் போது பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்திய புகைப்படத்தையும் இணைத்து பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவுகளில், “ஜார்கண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரனும், அவரது மனைவியும் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

#முன்னதாக சிபுசோரன் மறைவுக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆறுதல் கூறியது நினைவிருக்கலாம்! #ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சி வர வாய்ப்பா??” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா கூட்டணியில் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன். இவர் சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி என்டிஏ கூட்டணியில் இணையப் போவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. அவர் வெளியேறுவாரா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

காங்கிரசுடன் அதிருப்தி காரணமாக தன்னுடைய மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் என்று புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்த சந்திப்பு உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம். ஹேமந்த் சோரன் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அப்படி இருக்க புகைப்படம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

உண்மைப் பதிவைக் காண: business-standard.com I Archive

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024ம் ஆண்டு ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்ததாக இந்த புகைப்படத்தை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க இருந்த ஹேமந்த் சோரன், தன்னுடைய பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் கூட 2024 நவம்பர் 26ம் தேதி வெளியிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில் இந்த புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த பதிவிலிருந்து எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலக பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது, இந்த புகைப்படத்துடன் கூடிய பதிவை பிரதமர் அலுவலகம் 2024 நவம்பர் 26ம் தேதி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் 2025ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பிரதமரை சந்தித்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டதால் தன் மனைவியுடன் பிரதமர் மோடியை சந்தித்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் என்று பரவும் புகைப்படம் 2024ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:காங்கிரசுடன் அதிருப்தி காரணமாக மோடியை சந்தித்த ஜார்கண்ட் முதல்வர் என்று பரவும் புகைப்படம் – உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply