
இஸ்ரேல் மக்களை நேரடியாக பாதிக்காத வகையில் கேஸ் ஸ்டேஷன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive
குண்டு வெடித்து தீப்பிழம்பு எழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று இரவு ஈரான் இஸ்ரேலின் எரிவாயு station ஒன்றை தாக்கி அழித்தத. ஈரான் இது வரை பொது மக்கள் வசிப்பிடத்தை தாக்கவில்லை என்பது ஈரானின் மனித மாண்பு செயல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் மீது ஈரான் 2024 அக்டோபர் 1ம் தேதி நூற்றுக் கணக்கான ஏவுகணைகளைச் செலுத்தித் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு இந்த கட்டுரை தயாராகும் வரையில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் இல்லை. இந்த நிலையில், ஈரான் மிகவும் மனிதத் தன்மையுடன் இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நேரடியாக பாதிப்பு இல்லாத எரிவாயு நிலையத்தில் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: fesnews.media I Archive
வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் இல்லை, இஸ்ரேல் என்பது தெரியவந்தது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகச் செய்திகள் தெரிவித்தன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் படைகள் தாக்குதலில் ஈடுபடாது என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் அறிவித்ததால் அதற்குப் பதிலடியாக லெபனானில் உள்ள பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டிருந்தன.
அதே நேரத்தில் இஸ்ரேலிய ஊடகங்களில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வெடிப்பு ஏற்பட்டது என்பது போல செய்தி வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் அந்த பகுதியில் அதிக அளவில் உள்ளதாகவும், அங்கு தாக்குதல் நடத்த உள்ளதால் மக்கள் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்றும் வேறு சில செய்திகள் நமக்கு கிடைத்தன.
இவை எல்லாம் இந்த வீடியோ இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் போது பதிவானது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வீடியோவை, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மக்களை பாதிக்காத வகையில் தாக்குதல் நடத்திய ஈரான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
