
சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை புல்டோசர் (Bulldozer) இயந்திரத்தில் அள்ளி, லாரியில் ஊற்றிய தி.மு.க அரசு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புல்டோசரில் மழை நீரை அள்ளி, லாரியில் ஊற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த அதிசயத்தை காண அமெரிக்கா.. ஜப்பான்.. ரஷ்யா.. இன்னும் பல தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர் …இது போன்ற புது வித யோசனையை செயல்படுத்தும் அறிவாளிகள் அதிகமாக உள்ள தமிழக அரசு அதிகாரிகள் ,அரசைப் பாராட்ட வார்த்தையே இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அது தமிழ்நாடு அரசின் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில், வழிகாட்டுதலில் அல்லது உத்தரவின் பேரில் நடந்தது போலவே சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சாலையில் தேங்கியிருந்த மழை நீரை புல்டோசர் இயந்திரம் மூலம் அள்ளி லாரியில் ஊற்றும் வீடியோவை பகிர்ந்து தமிழக அரசின் செயல் என்று பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவை பார்க்க மழை நீரை அகற்ற இந்த நடவடிக்கை எடுத்தது போல தெரியவில்லை, வண்டியை சுத்தப்படுத்தும் நோக்கில் தண்ணீரை எடுத்து ஊற்றியது போல உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் நடந்தது போலவும் இல்லை. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2023ம் ஆண்டு இந்த வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது என்று பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதற்கு முன்பு இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்று 2019ம் ஆண்டில் இருந்து பலரும் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இன்னும் தொடர்ந்து தேடிய போது முதன் முதலில் 2018ம் ஆண்டு டிசம்பரில் இந்த வீடியோ சௌதி அரேபியாவில் எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ கிடைத்தது. 2018 நவம்பரில் இந்த வீடியோ ஈராக் தலைநகர் பாக்தாத்தில் எடுக்கப்பட்டது என்று சிலர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர்.
பாக்தாத் என்று பதிவிட்டிருந்தவர்களுள் ஒருவரின் சிறு குறிப்பை பார்த்த போது அவர், அல் ஜசீரா ஊடகத்தின் துருக்கி நாட்டுக்கான மூத்த நிருபர் என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றித் தெளிவான ஆதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், 2018ம் ஆண்டில் முதன் முதலில் ஈராக் நாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக முதல் பதிவு நமக்கு கிடைத்துள்ளது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் விடியல் அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது 2021ம் ஆண்டு மே மாதம் தான். ஆனால், அதற்குக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புல்டோசரில் மழை நீரை அள்ளி லாரியில் ஊற்றிய விடியல் தமிழ்நாடு அரசு என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
2018ம் ஆண்டில் இருந்து வெளிநாட்டில் புல்டோசர் மூலம் சாலையில் தேங்கியிருந்த மழை நீரை முயன்றதாக பரவும் வீடியோவை தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:புல்டோசரில் மழை வெள்ள நீரை அள்ளிய விடியல் அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
