
‘’காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Asianet News Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தனது இணையதளத்திலும் ஏசியாநெட் பதிவிட்டுள்ளது.
அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நமது ஆதாரத்திற்காக, ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியை ஸ்கிரின் ஷாட் எடுத்து இங்கே இணைத்துள்ளோம்.

இதில், காமராஜ் புகைப்படத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்துவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெகன் மோகன் ரெட்டி இப்படி செய்தாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் ஆதாரம் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதேசமயம், இதே புகைப்படத்துடன் கூடிய செய்தியை கலைஞர் செய்திகள் இணையதளம் பகிர்ந்துள்ள விவரம் கிடைத்தது.

இதன்படி, கலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்த செய்தியை கிளிக் செய்து பார்த்தபோது, அது அச்சு பிசகாமல் ஏசியாநெட் வெளியிட்ட செய்தி, புகைப்படத்தை பகிர்ந்திருந்த உண்மை தெரியவந்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

கலைஞர் செய்திகள் இந்த செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, வாசகர் ஒருவர் அந்த செய்தியை உண்மை என நினைத்து ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்த ஆதாரம் கிடைத்தது.

இப்படி ஒரு சம்பவமே நடைபெற்றதா இல்லையா என்ற சந்தேகம் நிலவும் சூழலில், இவர்கள் அதற்கான ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருப்பதால், நமக்கும் சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும், கூகுளில் குறிப்பிட்ட புகைப்படத்தை பதிவேற்றி, அதனை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது போலியான புகைப்படம் என்ற உண்மை தெரியவந்தது.

அதாவது, கடந்த ஜூலை 6ம் தேதி சனிக்கிழமையன்று குண்டூர் மாவட்டம் தேடப்பள்ளி சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு மறைந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்து, இவர்களாகவே காமராஜ் படத்திற்கு மரியாதை செலுத்தியது போல, போலியாக சித்தரித்து பகிர்ந்திருக்கிறார்கள்.
இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்த்தால், உண்மை ஆதாரங்கள் எதுவுமின்றி ஒரு ஃபோட்டோஷாப் செய்த போலி புகைப்படத்தை பகிர்ந்து இத்தகைய வதந்தியை பரப்பியுள்ளார்கள் என சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் உள்ள புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ மற்றும் செய்தியை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன்: போலி புகைப்படத்தால் குழப்பம்
Fact Check By: Pankaj IyerResult: False
