FACT CHECK: டாக்டர் கஃபீல் கான் டெல்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்றாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்த டாக்டர் கஃபீல் கான் டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உத்தரப்பிரதேச குழந்தைகள் நல டாக்டர் கஃபீல் கான் டிராக்டர் ஓட்டும் காட்சியுடன் கூடிய புகைப்பட பதிவு பகிரப்பட்டு வருகிறது. அதில், “26.1.2021 தில்லி வந்த டிராக்டர் பேரணியில் 50 இந்து குழந்தைகளைக் கொன்று விட்டு ஜாமீனில் இருக்கும் கொடூர குற்றவாளி டாக்டர் காஃபீல் கான். இவனுக்கும் விவசாய பேரணிக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்குவாரா ஸ்டாலின்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Muthu Raman என்பவர் 2021 ஜனவரி 27ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுக்க டாக்டர் கஃபீல் கான் வெளியே இருந்து ஆக்சிஜன் வாங்கி வந்து உதவியதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

இது தொடர்பாக துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கஃபீல் கான் மீது எந்த தவறும் இல்லை என்று தெரியவந்தது. ஆனாலும், அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மேலும் ஒரு புதிய விசாரணை குழுவை அமைத்தது உத்தரப்பிரதேச அரசு. அதன் பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கருத்து கூறினார் என்பதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு குடிபெயர்ந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் டாக்டர் கஃபீல் கான் பங்கேற்றார் என்றும் இதற்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்டாலின் எதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. கஃபீல் கான் டெல்லி டிராக்டர் பேரணியில் பங்கேற்றாரா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

டாக்டர் கஃபீல் கான் டெல்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்றாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ரிவர்ஸ் இமேஜ் தேடலில் இந்த புகைப்படத்தை பதிவேற்றியும் பார்த்தோம். அவர் பங்கேற்றது தொடர்பாக நமக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

எனவே அவரது ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது முன்னதாகவே சில ஃபேக்ட் செக் ஊடகங்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருப்பதையும் அதை கஃபீல் கான் பகிர்ந்திருப்பதையும் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது டிராக்டர் மீது அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை அவர் 2021 ஜனவரி 26ம் தேதி பகிர்ந்திருப்பது தெரிந்தது. அதை பார்த்த போது டிராக்டர் ஓட்டுவது எப்படி என்று அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். 

Archive

நிலைத் தகவலை மொழியாக்கம் செய்து பார்த்த போது, “இன்றைய தினத்தில் டிராக்டர் ஓட்டுவது எப்படி என்பதை கற்றுக்கொள்வோம். நம்முடைய விவசாய நண்பர்கள் மிகவும் நிதானமாக நேரிய வழியில் நடந்து வருகின்றனர்” என்று கூறி குடியரசு தின வாழ்த்துகளைக் கூறியிருந்தார். இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

அடுத்து டாக்டர் கஃபீல் கான் தேசிய கொடியை ஏற்றுவது போலவும், அதற்கு வணக்கம் செய்வது போலவும் வீடியோக்களை அவரது உறவினர்கள் ஷேர் செய்திருந்தனர். அதை கஃபீல் கான் ரீட்வீட் செய்திருந்தார். அதிலும் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்த போது டிராக்டரில் அமர்ந்திருக்கும் வீடியோவை அவர் 2021 ஜனவரி 26ம் தேதி பதிவிட்டிருந்தார். ஆனால், அதே உடையில் ராஜஸ்தான் பெண்களுடன் உரையாடும் புகைப்படம் ஒன்றை 2021 ஜனவரி 25ம் தேதி பதிவிட்டிருந்தார். எனவே, இந்த வீடியோவும் 2021 ஜனவரி 25ம் தேதி அதாவது டிராக்டர் பேரணி நடைபெறுவதற்கு முந்தைய நாள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிந்தது.

Archive

தொடர்ந்து அவருடைய சமூக ஊடக பக்கங்களைத் தேடிய போது, இந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டது இல்லை, ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்று கஃபீல் கான் விளக்கம் அளித்த பதிவு கிடைத்தது. இதன் மூலம், டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் டாக்டர் கஃபீல் கான் பங்கேற்றார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பில் மருத்துவர் கஃபீல் கான் பங்கேற்றார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டாக்டர் கஃபீல் கான் டெல்லி விவசாயிகள் பேரணியில் பங்கேற்றாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False