
‘’தமிழன் பிரசன்னாவின் மனைவி கொலையா? தற்கொலையா?,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் டிவியின் லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, நியூஸ்7 தமிழ் டிவி இவ்வாறு செய்தி வெளியிட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இந்த நியூஸ் கார்டு பலராலும் பகிரப்படுவதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி, சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த விவகாரம் பற்றி சிலர் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஹேஷ்டேக் உருவாக்கி, தமிழன் பிரசன்னாவை கேலி செய்யும் வகையில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, மேற்கண்ட நியூஸ்7 தமிழ் டிவி பெயரிலான லோகோவும் பகிரப்படுகிறது.
உண்மையில், இதனை நியூஸ்7 தமிழ் டிவி வெளியிடவில்லை. இதுபற்றி நாமும், அந்த டிவியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டோம். குறிப்பிட்ட தகவலை பார்வையிட்ட அவர், ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரில் சிலர் விஷமத்தனமாக தொடர்ந்து இத்தகைய போலி நியூஸ் கார்டுகளை தயாரித்து பரப்பி வருகின்றனர்,’’ எனக் குறிப்பிட்டார்.
எனவே, நியூஸ்7 தமிழ் மேற்கண்ட நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரம் பற்றிய இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
