
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற போது நீதிபதி மகாதேவன் தமிழில் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நீதிபதி மகாதேவன் தமிழில் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்ச நீதிமன்றத்தில் ! பதவியேற்பு நிகழ்வில் தமிழில் ஏற்புரை தந்த தமிழ் மீதும் மொழி மீதும் பற்று கொண்ட தமிழறிஞர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மகாதேவன் சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்ற மகாதேவன் தமிழில் ஏற்புரையாற்றினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் தவறானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
முதலில் நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற விழாவின் வீடியோவை யூடியூபில் தேடி எடுத்தோம். முழு நிகழ்ச்சி வீடியோவையும் ஏஎன்ஐ செய்தி ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், பதவியேற்பு விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் வருகை தந்தது முதல், விழா முடிந்து 11.15க்கு நீதிமன்ற விசாரணை தொடங்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிறைவாக பேசியது வரை முழுமையாக இருந்தது. அதில் எங்கும் மகாதேவன் ஏற்புரை எல்லாம் நிகழ்த்தவில்லை.
நிகழ்ச்சியில் முதலில் நீதிபதி என்.கேடீஸ்வர் சிங் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து இரண்டாவதாக நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பதவியேற்றுவிட்டு கோப்பில் கையெழுத்துப் போட்டுவிட்டு தன்னுடைய இடத்திற்குச் சென்று அமர்கிறார் நீதிபதி மகாதேவன். அதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நிகழ்வை நிறைவு செய்யும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோருகிறார்கள். அவரும் நீதிமன்ற வழக்கமான நடவடிக்கைகள் 11.15க்கு தொடங்கும் என்று அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து செல்கின்றனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு மகாதேவன் தமிழில் ஏற்புரையாற்றினார் என்ற தகவல் தவறானது என்பது தெளிவானது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள வீடியோவை பார்க்கும் போது பிரிவுபச்சார விழாவில் அவர் பேசியது போல் உள்ளது. எனவே, யூடியூபில் நீதிபதி மகாதேவன், பிரிவுபச்சார விழா என்று தட்டச்சு செய்து தேடினோம். அப்போது பல ஊடகங்களிலும் அந்த வீடியோ வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. நியூஸ் 7 தமிழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் “நீதிபதி மகாதேவனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா” என்று குறிப்பிட்டு ஜூலை 16, 2024 அன்று ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சென்னையில் ஜூலை 16, 2024 அன்று நடந்ததாக செய்திகள் தெரிவித்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உச்சநீதிமன்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பேசியது இல்லை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசியது என்பதை உறுதி செய்தன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நீதிபதி ஆர்.மகாதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசியதை உச்ச நீதிமன்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் நிகழ்த்திய ஏற்புரை என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற மகாதேவன் தமிழில் பேசிய வீடியோ என்ற தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
