மருத்துவ இடங்களை தமிழ்நாடு விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினாரா?
வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் மருத்துவ இடங்களை விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைப்படத்துடன் தமிழ் நாடு பாஜக வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் அதிக மருத்துவ இடங்களை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை Satheeshkumar Chellappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இதை 2023 ஜூன் 15 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது. இவற்றை ஒன்றாக்கி, நாடு முழுவதுக்கும் ஒரே கலந்தாய்வு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்கள் எம்.பி.பி.எஸ் இடங்களை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரே கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. உண்மையில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இப்படி ஏதும் கோரிக்கை விடுத்தாரா என்று அறிய கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
உண்மைப் பதிவைக் காண: Facebook
அடுத்ததாக, இப்படி ஒரு நியூஸ் கார்டை தமிழ்நாடு பாஜக வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, கடந்த ஜூன் 6, 2023 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டை பா.ஜ.க வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அதில், "தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்" என்று அமைச்சர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வதந்தி பரப்பியிருப்பது தெளிவானது.
முடிவு:
தமிழகம் அதிக அளவில் மருத்துவ இடங்களை விட்டுத்தர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மருத்துவ இடங்களை தமிழ்நாடு விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினாரா?
Written By: Chendur PandianResult: False