
“தான் ஒரு சங்கராச்சாரியார் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று ஜோதிா்மடத்தின் பீடாதிபதி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதிக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மூன்று சங்கராச்சாரியார்களும் சான்றிதழ்களுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஜோதிா்மடத்தின் பீடாதிபதி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சங்கராச்சாரியார் மற்றும் இருவருடன் சான்றிதழ் ஒன்றை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#உத்திரப் பிரதேசத்தில் இருந்து #மாட்டுக்கறி வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதை சுட்டிக் காட்டிய சங்கராச்சாரியர் மீது மோடிக்கும், யோகி ஆதித்யநாத்திற்கும், அவர்மீது, சொல்லொண்ணா கோபம்! காவல் துறையை வைத்து மிரட்டி அவரை கங்கையில் ஸ்நானம் செய்ய விடாமல் தடுத்து, அவரது சிஷ்யர்களை அடித்து நொறுக்கியது யோகியின் காவல் துறை!
இது போதாதென்று, சங்கராச்சாரியாரின் தங்கியிருந்த குடிசையின் வாசலில் அவர் ஒரு சங்கராச்சாரியார் என்பதை நிரூபிக்க சான்றிதழை உடனே அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று அரசின் ஆணை ஒட்டப்பட்டது! இதோ மூன்று சங்கராச்சரியர்களும், அந்த சான்றிதழுடன் நிற்கும் காட்சி! மோடிக்கு இந்து மதமோ, ராமரோ முக்கியமில்லை! இந்து மத வெறியை தூண்டி விட்டு, செல்வம் சேர்ப்பதே குஜராத்திகளின் இலக்கு! மோடி + தாடி+ அதாடி +அம்பாதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சங்கர மடங்களுள் ஒன்றான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிா்மடத்தின் பீடாதிபதியான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். இதனால் இவருக்கும் பாஜக-வுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மாக மேளாவில் அமாவாசையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித நீராட வந்த அவரை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் சங்கராச்சாரியார் என்ற படத்தை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கம் கெட்டு மேளா நிர்வாகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாங்கள் சங்கராச்சாரியார்கள் தான் என்று அவிமுக்தேஷ்வரானந்தாவுடன் மேலும் இரண்டு சங்கராச்சாரியார்கள் சான்றிதழ்களுடன் விளக்கம் அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவிமுக்தேஷ்வரானந்தா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. தான் சங்கராச்சாரியார்தான் என்று அவர் எந்த ஒரு விளக்கத்தையும் வெளியிட்டதாக செய்திகள் இல்லை. எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: livehindustan.com I Archive
இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2025 ஜனவரியில் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்னையுடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: bhaskarenglish.in I Archive
அந்த புகைப்படம் தொடர்பாக தேடிய போது, 2025ம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவின் போது மூன்று சங்கராச்சாரியார்களும் இணைந்து ஒரு இந்து மத மாநாட்டை நடத்தினர். அதில் இந்துக்களின் தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிப்பது, இந்தியா முழுவதும் பசு வதைகளை நிறுத்துவது என்பது உள்ளிட்ட 30 பிரகடனத்தை வெளியிட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்து மதம் தொடர்பான ஆணையை மூன்று சங்கராச்சாரியார்களும் வெளியிட்டதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பிரகடனத்தின் புகைப்படங்களும் கூட அப்போது வெளியாகி இருந்தது.
இவை எல்லாம் தாங்கள் சங்கராச்சாரியார்கள் என்பதற்கான ஆதாரத்தை மூன்று சங்கராச்சாரியார்களும் வெளியிட்டார்கள் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உத்தரப்பிரதேச அரசின் உத்தரவைத் தொடர்ந்து தான் சங்கராச்சாரியார் என்பதற்கான ஆதாரங்களை காட்டிய சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா என்று பரவும் புகைப்படம் 2025 கும்ப மேளாவின் போது இந்து மதம் தொடர்பான பிரகடனத்தை அவர் வெளியிட்ட போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:“சங்கராச்சாரியார்” என்பதற்கான ஆதாரங்களை காட்டினாரா அவிமுக்தேஷ்வரானந்தா?
Fact Check By: Chendur PandianResult: Misleading


