ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இன்றி கவலைப்படுபவர்கள் லாட்லி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டால் ரூ.1 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “,, முக்கிய அறிவிப்பு.  ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்

 உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் உறவைத் தீர்மானித்த பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 திருமணத்திற்கான முழுச் செலவையும் லாட்லி அறக்கட்டளை  புதிய வாழ்க்கையை தொடங்க ஒவ்வொரு அன்பு மகளுக்கும் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும்.  லாட்லி அறக்கட்டளை  9871727415, 9873182468,  9717231663. இச்செய்தியை முடிந்தவரை பகிரவும், இதன் மூலம் தேவைப்படுபவர்கள் உதவலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த பதிவை ஃபேஸ்புக்கில் யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது, பலரும் இந்த பதிவை சமூக சேவையாக கருதி பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. Rekha Rekhamma என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 15ம் தேதி இந்த பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:

திருமணத்துக்கு நிதி உதவி செய்கிறார்கள், அதுவும் ஒரு லட்ச ரூபாய் வரையிலும் நிதி உதவி செய்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்தது. நாடு முழுவதும் இருந்து கோடிக் கணக்கானோர் இவர்களை அணுகியிருப்பார்களே, எப்படி இவர்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடிந்தது என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, இந்த பதிவு உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.

ஃபேஸ்புக் பதிவில் லாட்லி அறக்கட்டளை என்று குறிப்பிட்டு மூன்று எண்களை அளித்திருந்தனர். அந்த எண்களைத் தொடர்புகொண்டோம். அப்போது அந்த எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பது தெரிந்தது. ட்ரூ காலரில் அந்த எண்களைப் பதிவேற்றித் தேடிய போது அவை லாட்லி அறக்கட்டளையின் எண்கள்தான் என்பதும் உறுதியானது.

கூகுளில் லாட்லி அறக்கட்டளை, திருமணத்துக்கு நிதி உதவி என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது லாட்லி அறக்கட்டளை தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன. மேலும் லாட்லி அறக்கட்டளை வெளியிட்டிருந்த ட்வீட் பதிவும் நமக்கு கிடைத்தது. 2015ம் ஆண்டு அந்த பதிவு வெளியாகி இருந்தது. இந்தியிலிருந்த அந்த பதிவை மொழிமாற்றம் செய்து படித்துப் பார்த்தோம். 

அதில், “லாட்லி ஃபவுண்டேஷன் தொடர்பான செய்தி வாட்ஸ்ஆப்-ல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் லட்சக் கணக்கானவர்கள் எங்களுக்கு போன் செய்கின்றனர். அனைத்து அழைப்புகளுக்கும் எங்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால் எந்த எண்களுக்கான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானோர் போன் செய்கின்றனர்.

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FFoundationladli%2Fposts%2F953570584732225&show_text=true&width=500″ width=”500″ height=”272″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

லாட்லி பவுண்டேஷன் 2015ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி டெல்லி சத்தார்பூர் கோவில் மைதானத்தில் ஏழைப் பெண்கள் 51 பேருக்கு திருமணம் செய்து வைத்தது. இதில் இந்து, இஸ்லாம் என அனைத்து சமூக பெண்களும் இடம் பெற்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் பரிசாக வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

லாட்லி ஏற்பாடு செய்யும் இது போன்ற திருமண நிகழ்வுகளில் மட்டுமே இது போன்ற உதவிகளைச் செய்கிறது. தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் உதவுவது இல்லை. இது போன்ற கூட்டுத் திருமணம் எப்போது நடைபெறும் என்று எங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிடுகிறோம். எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்து எங்களைப் பின்பற்றுங்கள்.

இந்த செய்தியையும் முந்தைய செய்தி போன்று அதிக அளவில் பகிருங்கள். இதனால் தேவைப்படும் ஏழைகளைக் கண்டறிய உதவியாக இருக்கும். எங்களை போனில் அழைத்து சொந்தரவு செய்ய வேண்டாம். அப்போதுதான் அனைவருக்கும் சரியான தகவல் கிடைக்கும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் லாட்லி அறக்கட்டளை தனி நபர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்குகிறது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

அடுத்ததாக கல்விக் கட்டணம் செலுத்த நிதி உதவி செய்யும் எண்கள் என்று ஒரு பட்டியலை வழங்கினர் அவற்றை ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்தோம், அவை பயன்பாட்டில் இல்லை என்ற தகவலே கிடைத்தது. எனவே, அதுவும் தவறான தகவல் என்பது உறுதியானது.

முடிவு:

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை நிதி உதவி செய்கிறது லாட்லி அறக்கட்டளை என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

Fact Check By: Chendur Pandian 

Result: False