
உலக வங்கியில் இதுவரை கடன் வாங்காமல் ஆறு வருடம் ஆட்சி செய்த ஒரே பிரதமர் மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடி புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “உலகின் முன்னோடி! உலக வங்கியில் இதுவரை கடன் வாங்காமல் 6 வருடம் ஆட்சி செய்த ஒரே பிரதமர் மோடி மட்டுமே. மோடி சர்க்கார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Palani Chamy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதாவது, 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அப்படி இருக்கும்போது ஆறு ஆண்டுகள் கடன் வாங்காமல் ஆட்சி செய்தார், ஏழாவது ஆண்டு உலக வங்கியிடம் கடன் வாங்கிவிட்டார் என்று கூற வருகிறார்களா என்று தெரியவில்லை. உண்மையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உலக வங்கியில் கடன் வாங்காமல் ஆட்சி செய்கிறதா என்று ஆய்வு செய்தோம்.
உலக வங்கியில் இந்தியா வாங்கிய கடன்கள் தொடர்பாக அதன் இணையதள பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது 2014ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகும் மத்திய அரசு கடன் வாங்கியிருக்கும் தகவல் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: projects.worldbank.org I Archive I dinamalar.com I Archive 2
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் ஆறு ஆண்டுகளாகக் கடன் வாங்காத மோடி என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே 2020 மே மாதத்துக்கு முன்பு மத்திய அரசு உலக வங்கியில் கடன் ஏதும் வாங்கியதா என்று பார்த்தோம். மத்திய, மாநில அரசுகள் பல கடன்கள் வாங்கியிருப்பது தெரிந்தது. உதாரணத்துக்கு, 2015ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் உலக வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளது.
2020ம் ஆண்டு மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் சார்பில் தேசிய பசுமை வழி நெடுஞ்சாலை அமைக்க கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜல் சக்தி துறை சார்பில் வாஜ்பாய் பெயரிலான நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய அரசு கடன் பெற்றது தொடர்பாக மத்திய அரசின் செய்தி ஊடகப் பிரிவான பிஐபி-யில் செய்திக் குறிப்பும் கூட வெளியாகி இருந்தது. இது போல, நகர்ப்புற விரிவாக்கத் திட்டம், ஸ்கில் இந்தியா திட்டம், கொரோனா பொருளாதார மீட்பு திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது என்று தகவல் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: pib.gov.in I Archive
இதன் மூலம் 2014ம் ஆண்டுக்குப் பிறகு உலக வங்கியில் கடன் வாங்கவில்லை என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது. 2021ம் ஆண்டிலும் கூட கடன் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆறு ஆண்டுகள் உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்காமல் மோடி ஆட்சி செய்து வருகிறார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
பிரதமர் மோடி உலக வங்கியில் கடன் வாங்காமலே ஆட்சி செய்து வருகிறார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உலக வங்கியில் கடன் வாங்காமல் ஆட்சி செய்கிறாரா மோடி?
Fact Check By: Chendur PandianResult: False
