தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என்று மொட்டையாக ஒரு புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "லிடியலரசின் மற்றுமொரு மைல்கல். சீரழிந்த முதலாண்டு

சந்தி சிரிக்கும் அடுத்த ஆண்டு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இப்படி எந்த ஒரு செய்தியையும் எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை. 2022 மே 18ம் தேதி முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கூட செய்தி வெளியாகாத சூழல், “பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது, வருகிற மே 18ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது” என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படியான பதிவுகளைப் பார்த்த போது அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் இவற்றை பகிர்ந்து வருவதை காண முடிகிறது. ஒருவரும் எப்போது இந்த அறிவிப்பு வெளியானது என்று கேட்கவில்லை. கட்டணம் உயர்ந்துவிட்டது, கொள்ளையடிக்கின்றனர், ஸ்டாலினின் மோசமான ஆட்சி என்ற வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காண முடிந்தது. ஆந்திராவில் பஸ் கட்டணம் உயர்ந்தால் கூட அதற்கும் தமிழ்நாடு அரசை விமர்சித்து கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருவதையும் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு எதையும் வெளியிடாத சூழலில் இந்த தகவல் எப்படி வெளியானது என்று ஆச்சரியத்தில் ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இந்த நியூஸ் கார்டு பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 2020ம் ஆண்டில் இந்த நியூஸ் கார்டுடன் ஃபேஸ்புக்கில் வதந்தி வெளியாகி இருந்ததை காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

அதில் இருந்த விலைப் பட்டியலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் இருந்த விலைப் பட்டியலும் ஒன்றாக இருந்தது. 2020ம் ஆண்டு வெளியான ஃபேஸ்புக் பதிவில் 2018ல் பஸ் கட்டணத்தைத் தமிழ்நாடு அரசு உயர்த்தியது என்று ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க ஆட்சியின் போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையைத் தேடி எடுத்தோம். அதில் குறிப்பிடப்பட்ட விலை உயர்வும், தற்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள விலை உயர்வும் பொருந்திப்போனது. இதன் மூலம் 2018ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பான நியூஸ் கார்டை எடுத்து 2022ல் தி.மு.க ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: tn.gov.in I Archive

எரிபொருள் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது, ஊழியர் சம்பளம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் பஸ் கட்டணம் உயர்த்தப்படலாம். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவல் 2022ம் ஆண்டில் வெளியானது இல்லை, 2018ம் ஆண்டு வெளியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் பஸ் கட்டணம் உயர்வு என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாட்டில் 2022 மே 18ம் தேதி முதல் பஸ் கட்டணம் உயருகிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா?

Fact Check By: Chendur Pandian

Result: False