ராஜபக்சே தன்னுடைய உயிரைக் காக்க பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதுங்கு குழியில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "Karma is boomerang எந்த பதுங்கு குழிகளை தேடித்தேடி அப்பாவி தமிழின மக்களை கொன்றார்களோ அதே பதுங்கு குழியில் இன்று தஞ்சம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Prem Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 12ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இலங்கையில் பொருளாதாரம் மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் வெடிக்கவே பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகினார். ஆனால், கோத்தபய அதிபர் பதவியிலிருந்து விலகப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.

ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இந்திய அரசும் இலங்கை அரசும் இந்த தகவலை மறுத்தன. அவர் திரிகோணமலையில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ராஜபக்சே உயிருக்கு பயந்து பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: tamilnet.com I Archive

தொடர்ந்து தேடிய போது 2004ம் ஆண்டு இந்த படத்தை தமிழ் நெட் என்ற இணைய ஊடகம் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்நாட்டுப் போர் நடந்து வரும் போர் முணையில் ஆய்வு செய்தார். போர் முணையில் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழிகளைப் பார்வையிட்ட படம் என்று இந்த படத்தை பகிர்ந்திருந்தனர். இதன் மூலம் 2004ம் ஆண்டு படத்தை 2022ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுக் கலவரத்தின் போது எடுத்தது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. மஹிந்த ராஜபக்சே இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகி, பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால் அவர் பதுங்கு குழியில் இருக்கிறார் என்று பகிரப்படும் படம் 2004ல் அவர் ஆய்வு செய்த போது எடுத்த படம் என்பது உறுதியாகிறது.

முடிவு:

மஹிந்தா ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்தார் என்று பகிரப்படும் படம் 2004ம் ஆண்டு உள்நாட்டு போர் நடந்த சூழலில் போர் முணையில் ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த படமா இது?

Fact Check By: Chendur Pandian

Result: Missing Context