
ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா, அதை பிரதமர் திறந்து வைக்க வேண்டுமா என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
எச்.ராஜா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிடும் நியூஸ் கார்டு போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ராணிக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபமா? அதனை எங்கள் பாரத பிரதமர் திறந்து வைக்க வேண்டுமா?” என்று இருந்தது.
இந்த பதிவை அசோக் பரஞ்ஜோதி என்பவர் 2021 ஜனவரி 20 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க உள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-வுடனான கூட்டணி தொடரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஊழல் ராணி என்று விமர்சித்து எச்.ராஜா பதிவிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த நியூஸ் கார்டை பலரும் ஷேர் செய்து வரவே இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில், எச்.ராஜாவின் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போல எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. மேலும் வழக்கமாக எச்.ராஜாவின் சமூக ஊடக பக்கங்களில் வெளியாகும் நியூஸ் கார்டு போலவும் இல்லை.

ஒரு வேளை ராஜா இந்த கருத்தைக் கூறியிருந்தால், அது அனைத்து ஊடகங்களிலும் மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். எனவே, கூகுளில் மணி மண்டபம் திறப்பது தொடர்பாக எச்.ராஜா கருத்து ஏதும் தெரிவித்தாரா என்று தேடினோம். ஆனால், எப்படி ஒரு துண்டு செய்தி கூட நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
இதை உறுதி செய்ய தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி எஸ்.எம்.பாலாஜியிடம் கேட்டோம். அதற்கு அவர், “இது போலியாது. எச்.ராஜா பெயரில் யாரோ போலியாக இதை உருவாக்கி பரப்பி வருகின்றனர். எச்.ராஜா இது போல எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை” என்றார்.
மேலும், எச்.ராஜாவின் மருமகன் சூர்யா ராமதாஸ் மற்றும் தமிழக பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டிஆர்.நிர்மல் குமார் ஆகியோரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தனர்.
எச்.ராஜாவில் சமூக ஊடக பக்கங்களில் இந்த பதிவு இல்லை. எச்.ராஜா இந்த கருத்தைக் கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. தமிழக பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மற்றும் எச்.ராஜாவின் மருமகன் ஆகியோர் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்துள்ளனர். இதன் அடிப்படையில், “ஊழல் ராணிக்கு மணி மண்டபம் தேவையா?” என்று எச்.ராஜா கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஊழல் ராணிக்கு மணிமண்டபம் தேவையா என்று எச்.ராஜா கேட்டதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஊழல் ராணிக்கு மணிமண்டபம் தேவையா என்று எச்.ராஜா கேட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
