
‘’உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்,’’ என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் – திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 பிரசார பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால், தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. நாள்தோறும் சமூக வலைதளங்களிலும் புதுப்புது தகவல்கள் பரவி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதுபற்றி நாமும் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறோம்.
இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலியான செய்திதான் மேலே நாம் கண்டதும்.
இதுகுறித்து, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி கார்த்திக் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இதனை பார்வையிட்ட அவர், ‘’இது புதிய தலைமுறை பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று தெரிவித்தார்.
எனவே, புதிய தலைமுறை பெயரில் போலியான செய்தியை உருவாக்கி, சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பி வருவதாக, தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
