
‘’டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிக்கு போலீஸ் அடி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
‘’செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி அவமானப்படுத்தியதால் டெல்லி போலீசாரால் தாக்கப்பட்ட நபர்,’’ என்று கூறி இந்த புகைப்படம் தொடர்பான தகவலை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு புதியதாக அமல்படுத்தவுள்ள விவசாயிகள் மசோதாவை எதிர்த்து, டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் வசிக்கும் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி, டிராக்டரில் டெல்லியை சுற்றிலும் முற்றுகையிட்டு, அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஜனவரி 26, 2021 இந்திய குடியரசு தினம் என்பதால், அன்றைய தினம், டெல்லிக்குள் டிராக்டரிலேயே சென்று செங்கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன்படி, ஜனவரி 26, 2021 அன்று விவசாயிகள், ஏராளமான டிராக்டரில் செங்கோட்டையை நோக்கிச் சென்றதால், டெல்லியின் பல இடங்களிலும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், சில விவசாயிகள் செங்கோட்டை மீது ஏறி, அங்கே இருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு, சீக்கியர்களின் புனிதக் கொடியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த கொடி அகற்றும் நிகழ்வில் ஈடுபட்ட நபரையே போலீசார் அடித்துவிட்டதாகக் கூறி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதேபோல, இன்னும் சிலர் டிராக்டர் பேரணியில் பங்கேற்றதால், டெல்லி போலீசார் இவரை அத்துமீறி தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், உண்மையில், இந்த புகைப்படத்தில் இருப்பவர் விவசாயி அல்ல, ஒரு ஆட்டோ டிரைவர். டெல்லியில் கடந்த 2019ம் ஆண்டு இவரை போலீசார் தாக்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
Lokmata News Link I Archived Link
இதுதொடர்பான வீடியோ காட்சியும் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.
இதில் தாக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூட ட்வீட் வெளியிட்டு, கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
எனவே, 2019ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான புகைப்படத்தை எடுத்து, தற்போதைய டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்ததால் இவரை போலீசார் அடித்தனரா?
Fact Check By: Pankaj IyerResult: False
