
உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் அவல நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளைஞர் ஒருவரின் தலை முடியை அரை குறையாக மழித்து, இரும்பு கம்பியை வைத்து அவரைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “அகண்ட பாரதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை காண்பிக்கும் உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் தலித் இளைஞரான லக்கானின் கைகள் கட்டப்பட்டு மொட்டையடித்து அவரது கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து துன்புறுத்தும் வெறிபிடித்த மிருகங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை RED GREEN TN MEDIA என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 மார்ச் 28ம் தேதி பதிவிட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. வட இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறை தாக்குதல் அதிக அளவில் நடப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றில் பல போலிச் செய்தியாகவும் உள்ளன. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அப்போது சில ட்வீட்கள் நமக்குக் கிடைத்தன. உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டுப் பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு மீரட் போலீஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “பிரம்மபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்டவரும் தாக்கியவரும் தூரத்து உறவினர்கள். இந்த சம்பவம் தொடர்பாக பிரம்மபுரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தூரத்து உறவினர் என்றால் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
மீரட் போலீஸ் தகவல் அடிப்படையில் கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தன. அதில், “தாக்குதலுக்கு உள்ளான நபரின் பெயர் லக்கான் குமார். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன்னுடைய சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரது சகோதரிக்கும் தூரத்து உறவினர் ஒருவருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த போது சாலையில் வந்து கொண்டிருந்த லக்கான் குமாரை தாக்கியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கூடுதல் தகவல் கிடைக்குமா என்று அறிய நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர்கள், “இந்த சம்பவம் தொடர்பாக பிரம்மபுரி காவல் நிலைய அதிகாரி விஷ்ணு கௌஷிக்கை தொடர்புகொண்டு பேசினோம். அவர் தாக்கியவர், பாதிக்கப்பட்டவர் என இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான். தாழ்த்தப்பட்டோர் மீதான சாதி ரீதியான ஒடுக்குமுறை சம்பவம் என்று கூறுவது தவறு. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்” என்று கூறினர். இது தொடர்பாக வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்!
நம்முடைய ஆய்வில் தாக்கப்பட்ட நபர் தாழ்த்தப்பட்டவர் என்றாலும், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடந்த மோதல் இது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை உயர் சாதியைச் சார்ந்தவர்கள் அடிப்பதாக பரவும் தகவல் தவறானது என்றும், உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதல் வீடியோவை தவறாக பகிர்ந்திருப்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
