
மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலப்புரத்திற்கு வந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள். நாடு முன்னேற கூடாதுன்னு சில மர்ம நபர்கள் செய்யும் ஒழுங்கீனமான வேலை தான் இது. ஆயிரம் விவேக் வந்தாலும் இவனுங்களை திருத்த முடியாது போல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை நேதாஜியின் படைவீரர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 மே 2ம் தேதி பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் மற்றும் பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வந்தே பாரத் என்பது இந்தியன் ரயில்வேயின் மிகப்பெரிய சாதனை. ஆனால், இதை ஒரு குறிப்பிட்ட கட்சியின் சாதனைப் போல பலரும் அதில் பிரச்னை ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளான படத்தைப் பகிர்வது, அதை வைத்து விமர்சனம் செய்வது என்று சோஷியல் மீடியாவில் பலரும் இதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தற்போது கேரள மாநிலம் மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி மீது யாரோ விஷமி கல் எறிந்தது அரசியல் ஆகியுள்ளது. இதற்கு முன்பு ஒன்று, இரண்டு தடவை வந்தே பாரத் ரயில் கண்ணாடி மீது கல் வீசப்பட்டிருந்தது. கர்நாடகாவில் கூட வந்தே பாரத் ரயில் ஜன்னல் மீது கல் வீசப்பட்டுள்ளது. அப்போது எல்லாம் அதை அரசியல் ஆக்கவில்லை. கேரளாவில் மலப்புரத்தில் கல் எறிந்ததை அரசியலாக்கிப் பதிவிட்டு வருகின்றனர். இந்த அரசியலுக்குள் செல்லவில்லை. மலப்புரத்தில் தாக்குதலுக்கு ஆளான வந்தே பாரத் ரயில் ஜன்னலா இது என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: zeenews.india.com I Archive
இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை ஜனவரி 2023ல் பல ஊடகங்கள் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. ஜீ நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்தோம். அதில் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் ஜன்னல் மீது கல் எறிந்ததில் உடைந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படம் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிகழ்ந்த சம்பவத்துடன் தொடர்பு இல்லாதது என்பது தெளிவானது.
விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் வெளியிட்டிருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ளது போன்ற காட்சியை காண முடிகிறது.

உண்மைப் பதிவைக் காண: onmanorama.com I Archive
கேரளாவில் கல் வீச்சுக்கு ஆளான ரயிலின் புகைப்படம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது பல மலையாள ஊடகங்களிலும் இது தொடர்பான படம், வீடியோவுடன் கூடிய செய்தி வெளியாகி இருந்தது. அதில் கண்ணாடியில் விரிசல் தெரிகிறதே தவிற, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருப்பது போன்று இல்லை. இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் வந்தேபாரத் ரயில் கண்ணாடி மீது கல் வீசப்பட்ட புகைப்படத்தை கேரளாவில் நிகழ்ந்ததாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. கேரளாவில் ரயில் ஜன்னல் மீது கல் வீசப்பட்டது உண்மைதான், ஆனால் இந்த புகைப்படம் அதனுடன் தொடர்புடையது இல்லை. இதன் அடிப்படையில் உண்மையும் தவறும் கலந்த பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்ட புகைப்படத்தை கேரளாவில் மலப்புரத்தில் நிகழ்ந்ததாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கேரளாவில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி தாக்கப்பட்ட காட்சியா இது?
Fact Check By: Chendur PandianResult: Partly False
