டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அதிஷி மற்றும் ரேகா குப்தா ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை ஒன்றாக வைத்து உருவாக்கப்பட்ட பதிவை பலரும் Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிஷி முதல்வராக இருக்கும் போது அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படம் இருந்ததையும், ரேகா குப்தா பதவியேற்ற பிறகு உள்ள புகைப்படத்தில் குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படம் உள்ளதையும் காட்டியுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி இருந்த வரையில் முதலமைச்சர் அலுவலகத்தில் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. 2022ம் ஆண்டு டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இதை மிகப்பெரிய அறிவிப்பாக அறிவித்தார். ஆனால், டெல்லி முதல்வராக பாஜக-வின் ரேகா குப்தா பதவியேற்ற பிறகு முதலமைச்சர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற பாஜக-வின் ரேகா குப்தா முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்களை அகற்றிவிட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த முன்னாள் முதலமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த தகவலை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா முற்றிலுமாக மறுத்திருந்தார்.
அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் முதல்வர் அலுவலகத்திலேயே தான் உள்ளது. அதனுடன் நாட்டின் முக்கிய தலைவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசாங்கத் தலைவர், குடியரசுத் தலைவர் மற்றும் நாட்டின் தந்தை காந்தி ஆகியோரின் புகைப்படங்களை வைக்கக் கூடாதா என்று பாஜக பதில் கேள்வி எழுப்பியிருந்தது. இதனுடன் முதலமைச்சர் அலுவலகத்தில் வேறு இடங்களில் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவைப் பார்த்தோம். அதில், அவரது அலுவலகத்தில் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது, அதிஷியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து பாஜக வெளியிட்ட புகைப்படம் தொடர்பாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், முதலமைச்சர் நாற்காலிக்கு வலது புற சுவரில் அம்பேத்கர் புகைப்படமும், இடது புற சுவரில் பகத் சிங் புகைப்படமும் இருந்தது. பிப்ரவரி 24ம் தேதி அவர் அளித்த பேட்டி வீடியோவிலும் புகைப்படங்கள் அப்படித்தான் மாட்டப்பட்டிருந்தன.
ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் டெல்லி முதலமைச்சர் இருக்கைக்குப் பின்பு உள்ள சுற்றில் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பாஜக அந்த இடத்தில் குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்களை வைத்துள்ளது. வேறு ஒரு இடத்தில் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் புகைப்படங்களும் மாட்டப்பட்டுள்ளன. ஆனால், அலுவலகத்திலிருந்து அகற்றப்படவில்லை என்பதை இந்த வீடியோ உறுதி செய்கிறது.
அம்பேத்கர், பகத் சிங் ஆகியோர் புகைப்படங்கள் அகற்றப்பட்டதாக அதிஷி குற்றம்சாட்டி அதற்கு ஆதாரமாக பத்திரிகைகளில் வந்த புகைப்படத்தை தான் காட்டியிருந்தார். அதற்கு முதலமைச்சர் ரேகா குப்தா பதில் அளித்துவிட்டார். மேலும் தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பதை பத்திரிகையாளர்களுக்கும் காட்டியுள்ளார். இதன் மூலம் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டதாக பரவும் தகவல் தவறாது என்பது தெளிவாகிறது.
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படம் வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டதை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Insight
