மேற்கு வங்கம் கொல்காத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் ஆஜரானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கொல்கத்தா முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானதாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "மேற்க்குவங்காளத்தில் நடந்த கற்ப்பளிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரானார் இன்டி கூட்டணி கபில் சிபில்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொல்கத்தா முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி உயிரிழந்த மருத்துவருக்கு நீதி வேண்டும் என்று பலரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேற்கு வங்க அரசு சார்பில் கபில் சிபல் ஆஜராகி வருகிறார். குற்றவாளிக்கும் ஆதரவாக ஆஜராகியுள்ளாரா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

இது தொடர்பாக கூகுளில் கபில் சிபல், கொல்கத்தா, பெண் மருத்துவர் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது, மேற்கு வங்க அரசு தரப்பில் அவர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார் என்று மட்டுமே செய்திகள் நமக்குக் கிடைத்தன.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தேடிப் பார்த்தோம். அப்போது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தியதாக தகவல் கிடைத்தது. உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணை மற்றும் உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்திலிருந்து எடுத்தோம். உச்ச நீதிமன்றமே வழக்கை பதிவு செய்திருந்ததால் எதிர் தரப்பு என்று மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், கபில் சிபில் பெயரும் இடம் பெற்றிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: api.sci.gov.in I Archive

உத்தரவின் 9வது பத்தியில், கபில் சிபல் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரானார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், யார் யார் தரப்பில் யார் யார் ஆஜரானார்கள் என்று பட்டியலும் அளிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெயர் அதில் இடம்பெற வில்லை. இதன் மூலம் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மேற்கு வங்க அரசுக்காக ஆஜரானார் என்பது உறுதியாகிறது.

முடிவு:

கொல்கத்தா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி தலைவர்களுள் ஒருவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்று தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை; குற்றவாளிக்கு ஆதரவாக கபில் சிபல் ஆஜர் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False