இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியை பயன்படுத்துகிறார்களா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

இஸ்ரேல் தாக்குதலிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியப் பெண்கள் சிலர் இந்தியக் கொடியுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்கள்.. இது தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவானது அக்டோபர் 19, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ மற்றும் தகவலை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் தாக்குதலிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியையும் சர்வதேச ஊடகங்களோ, இஸ்ரேல் சென்றுள்ள இந்திய ஊடகங்களோ வெளியிட்டதாகப் பதிவு இல்லை. எனவே, இந்த வீடியொ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை falak_haq120 என்ற இன்ஸ்டாகிராம் ஐடி கொண்டவர் அர்பயீன் நடைப்பயணம் 2023 (Arabeen walk 2023) என்று குறிப்பிட்டு 2023 ஆகஸ்ட் 31ம் தேதி பதிவிட்டிருந்தது தெரிந்தது. ஹமாஸ் தாக்குதல் அக்டோபர் 2023 முதல் வாரத்தில்தான் நடந்தது. ஆனால், இந்த வீடியோ ஆகஸ்ட் 2023ல் வெளியாகி இருப்பதன் மூலம் இதற்கும் தற்போது நடந்து வரும் பாலஸ்தீனம் – இஸ்ரேல் போருக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: Instagram

Arabeen walk என்றால் என்ன என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது ஈராக்கில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் ஒன்று கூடும் புனித பயண நிகழ்வு என்று செய்திகள் கிடைத்தன. புனித நகரமான கர்பாலாவுக்கு ஈரான், ஈராக்கின் பல பகுதிகளிலிருந்து மக்கள் நடைப்பயணம் மேற்கொள்வார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தியில் இந்த நிகழ்வில் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் 2023 அக்டோபர் 7ல் தொடங்கியது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 ஆகஸ்ட் 31ல் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் அர்பயீன் நடைப்பயணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்த வீடியோவுக்கும் தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில் இந்தியக் கொடியைப் பயன்படுத்தி உயிர் தப்பிக்கும் பாலஸ்தீனியர்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்திய கொடியை பயன்படுத்தும் பாலஸ்தீனியர்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியை பயன்படுத்துகிறார்களா?

Written By: Chendur Pandian 

Result: False