
“ஜி7 மாநாட்டில் பங்கேற்றவர்கள் புகைப்படத்தில் மோடி இல்லை… அவர் மாநாட்டில் பங்கேற்கவே இல்லை. மாநாடு நடந்து முடிந்த பிறகு தான் மோடி அங்கு சென்றார்” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஜி7 மாநாட்டில் தலைவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதனுடன் நியூஸ் தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், “பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள், அதற்கான பலனை நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “ஜி 7 மாநாட்டில் பங்கேற்றவர்களின் புகைப்படத்தில் மோடியின் புகைப்படம் இல்லையே! அப்போ மோடி பேசியது எங்கே?
ஜி 7 மாநாட்டு தலைவர்கள் ஒன்று கூடி பேசி முடித்து மாநாட்டை நிறைவு செய்த பிறகு, ஜீ7 நாடுகளின் தலைவர்களுடன் பேசியயை, ஏதோ மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்று பேசியதை போல் வெளியிட்டு பாஜக இழிவான போலி விளம்பரத்தை தேடுகிறது உண்மையிலேயே ஜி 7 என்பது இந்த ஏழு நாடுகள் தான். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் யுனைடெட் கிங்டம் (UK) இதில் இந்தியா இல்லவே இல்லை.
மதியாதார் தலைவாசல் மிதியாதே! என்பது சுயமரியாதையை சுட்டிக்காட்டும் ஒரு பழமொழி! மோடிக்கு அது இல்லையென்றாலும், இந்திய நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு! தன்னுடைய இழிவான விளம்பர மோகத்தால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை பெற்று தரும் மிக மோசமான பிரதமர் மோடி தான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
“ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவே இல்லை. ஜி7 தலைவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் மோடி இல்லை” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மாநாட்டில் பங்கேற்காமலேயே பங்கேற்றதாக இந்தியாவில் விளம்பரம் செய்து கொண்டது போன்று பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் மற்றும் புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
ஜி7 2025ம் ஆண்டுக்கான உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் ஜூன் 16 முதல் 17ம் தேதி வரை நடந்தது. இதில் ஜி7 நாடுகள் மட்டுமின்றி, வளரும் நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறியது போன்று ஜி7 நாடுகளில் இந்தியா உறுப்பினர் இல்லைதான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.
வளரும் நாடுகள் ஜி20 என்ற அமைப்பை உருவாக்கியது போன்று வளர்ந்த நாடுகளுக்கு ஜி7 என்ற அமைப்பு உள்ளது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உள்ளன. தொடக்கத்தில் 6 நாடுகளுடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 7வது நாடாக கனடா சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் இணைந்தது. இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படும்.
இந்த ஆண்டு கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மாநாட்டில் பங்கேற்றது தொடர்பான பல வீடியோக்கள், புகைப்படங்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்தன. அவற்றை எல்லாம் நம்பாமல் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்கவே இல்லை என்று பதிவிட்டிருந்ததால் ஊடகங்களில் வெளியான செய்தியை ஒதுக்கிவைத்துவிட்டு ஜி7 மாநாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மோடி பங்கேற்பு தொடர்பாக வெளியான செய்திகளைத் தேடினோம்.
ஜி7 இணையதளத்தில் மல்டிமீடியா பகுதியில் மாநாட்டுக்கு வந்த தலைவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். Family photo with outreach partners என்று தலைப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடியும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜி7 இணையதளத்திலேயே மோடி புகைப்படம் இருப்பதன் மூலம் அவர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கவில்லை என்ற தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: g7.canada.ca I Archive
எதற்காக இரண்டு முறை ஜி7 தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து ஆய்வு செய்தோம். அப்போது 17ம் தேதி ஜி7 தலைவர்கள் மட்டுமும் 18ம் தேதி ஜி7 தலைவர்களுடன் அழைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தெரிந்தது.
ஜி7 மாநாட்டில் முதல் நாளில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டும் குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொள்வதும், 2வது நாள் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து உலகத் தலைவர்களும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்வதும் வழக்கமான ஒன்று என்று கூறப்படுகிறது. அதன் படி முதல் நாளில் ஜி7 தலைவர்கள் மட்டும் புகைப்படம் எடுத்துள்ளனர். அதாவது 17ம் தேதி ஜி7 தலைவர்கள் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதற்கு அடுத்த நாள் அதாவது ஜூன் 18ம் தேதி ஜி7 தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் அதாவது மோடி உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்த்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
உண்மைப் பதிவைக் காண: g7.canada.ca I Archive
ஜி7 மாநாட்டின் இந்த வழக்கமான நடவடிக்கை பற்றிய புரிதல் இன்றி, முதல் நாள் புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மாநாட்டில் மோடி பங்கேற்கவில்லை என்று தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
நம்முடைய ஆய்வில் மோடி மாநாட்டில் பங்கேற்றது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து தவறான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்கவில்லை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
