
‘’சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்து தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டவர் கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
சமீப காலமாக, சமூக வலைதளங்களில், தமிழ்நாட்டை உருவாக்கி, வளர்த்தவரே கருணாநிதிதான் என்கிற அளவில் திமுக ஆதரவாளர்கள் ஒரு கருத்துருவாக்கத்தை பரப்பி வருகின்றனர். ஒரு முதலமைச்சர் என்ற முறையில், இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் சரி; பின்பும் சரி; தமிழ்நாட்டின் வரலாற்றில், கருணாநிதி மட்டுமல்ல, நிறைய பேர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
ஆனால், தங்கள் சார்பு மட்டுமே, அனைத்தும் சாதித்தது என்று ஒரு கருத்துருவாக்கத்தை பரப்ப முனைந்தால், அதன் உண்மைச்சாயம் வெளுக்கும்போது, மக்களிடம் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்பதை, இதுபோன்ற தகவலை பகிர்வோர் யோசிப்பதில்லை.
அப்படியாக, உண்மைச் சாயம் வெளுத்த கதைதான், மேற்கண்ட தகவலும்…
ஆம். இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மருத்துவமனைகளில், மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா மிகப்பெரும் சுகாதார சீர்கேட்டை சந்தித்துள்ளது.
இத்தகைய சுகாதார நெருக்கடி சூழலை பின்னணியாகக் கொண்டு, ‘வட இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய நிலை இல்லை. இதற்கு காரணம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டு, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை இரண்டிலுமே, ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்ததுதான்,’’ என்று கருத்தை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.
உண்மை என்னவெனில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் எதுவும் கிடையாது. திரவ நிலையில் ஆக்சிஜனை கொள்முதல் செய்து, சேகரித்து வைக்கும் மையம்தான் உள்ளது. இதற்கான பணி உத்தரவு கடந்த 2007ம் ஆண்டு (கருணாநிதி ஆட்சி) பிறப்பிக்கப்பட்டு, 2012ம் ஆண்டில் (ஜெயலலிதா ஆட்சி) வெற்றிகரமாக ஆக்சிஜன் சேமிப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது.
இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவி வந்த சூழலில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் எதுவும் இல்லை; சேமிப்பு மையம்தான் உள்ளது என்று விளக்கம் அளித்து, அந்த மருத்துவமனையின் டீன் தோணிராஜன் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது தவிர்த்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள்தான் நிறுவப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி மையம், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை இல்லை. தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து, திரவ நிலையில் சேமித்து வைத்தே, சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள்.

எனவே, ஆக்சிஜன் சேமிப்பு மையத்திற்கும், உற்பத்தி மையத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல், ‘கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வை’ என்ற பெயரில், திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கருணாநிதி ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
