
மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளம் பெண் ஒருவரை கையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் சாலையின் நடுவே முட்டி போட சொல்கின்றனர். கடைசியில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர். நிலைத் தகவலில், “மணிப்பூரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள்…. விலை மதிப்பற்ற மனித உயிர் பறிக்கபடுகின்றது. இனக்கலவரம் மணிப்பூரில் அதிதீவிரம் அடைந்தது வருகின்றது. மத்திய அரசு இக்கலவரத்தை வேடிக்கை பார்பது ஏன்?. இதை தடுக்கும் பொறுப்பு யாருடையது?. இன்று மணிப்பூர் நாளை நமது மாநிலமாக கூட இருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை நெல்லை நிஜாம் நெல்லை என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மணிப்பூரில் இரண்டு சமூகத்துக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இளம் பெண்ணை பா.ஜ.க ஆதரவு வன்முறைக் குழு சுட்டுக்கொன்றது போன்று பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: mizzima.com I Archive
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ மணிப்பூர் கலவரம் தொடங்குவதற்கு முன்பே செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அந்த செய்திகளைப் பார்த்த போது, இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை என்றும், மியான்மாரில் (பர்மா) எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
2022ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வெளியான செய்தியை பார்த்தோம். அதில், தம்மு டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஆய் மார் துன் (Aye Mar Tun) என்ற பெண்ணை பிடிஎஃப் என்ற போராளிக் குழுவைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் மாதம் (2022) சுட்டுக்கொன்றனர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு பல மியான்மார் ஊடகங்களில் இது தொடர்பாக வெளியான செய்திகள், வீடியோக்களும் நமக்கு கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை, மியான்மாரில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
மியான்மாரில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோவை, மணிப்பூரில் பா.ஜ.க ஆதரவாளர்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நடு ரோட்டில் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்ததா?
Written By: Chendur PandianResult: False
