தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலை விட்டு ஓடும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

False சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

ஈரானின் தாக்குதலுக்கு பயந்து 70 ஆண்டுகளாக வாழ்ந்த வந்த நாடு வேண்டாம் என்று தப்பி ஓடும் இஸ்ரேலியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மலை மீது ஏராளமானவர்கள் நடந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரே வாரம் தான் 70 வருடங்களாக வாழவைத்த பூமியை விட்டு கோலன் குன்று ஏற துவங்கி விட்டான் யூதன்…

ஆனால் ஈரான் கொடுத்த தண்டனை என்று சொல்வதை விட ஏக* இறைவன் கொடுத்த மிகப்பெரிய தண்டை

இன்னும் இருக்கு இன வெறி பிடித்த யூதனுக்கு…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

யூதர்கள் 70 ஆண்டுகளாக வசித்து வந்த இஸ்ரேல் என்ற நாட்டை விட்டுவிட்டு தப்பி ஓடுகின்றனர் என்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், மலையைப் பார்க்க பசுமையான மலை போல உள்ளது. இஸ்ரேலில் இப்படி ஒரு இடமா என்ற ஆச்சரியத்துடன் இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஜூன் 2, 2025 அன்று இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் நேபாளத்தில் இமயமலைத் தங்கம், இமயமலை வயாகரா என்றெல்லாம் அழைக்கப்படும் Yarsagumba என்ற மூலிகையைத் தேடி மக்கள் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. டோல்பா (Dolpa) என்ற பகுதி மக்கள் மூலிகையைத் தேடி எடுத்தனர் என்றும், இந்த தேடுதலில் இரு கிராம மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்றெல்லாம் செய்திகள் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் ஜூன் 13ம் தேதி தொடங்கியது. ஆனால், இந்த வீடியோவோ அதற்கு 11 நாட்களுக்கு முன்பாகவே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், நேபாளத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்த வீடியோ இஸ்ரேலைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

தொடர்ந்து தேடிய போது ஆப்கானிஸ்தானிய மக்கள் சட்டவிரோதமாக துருக்கியில் குடியேறும் காட்சி என்று இதே வீடியோவை சிலர் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. அதே போல் இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து ஈரானியர்கள் தப்பிச் செல்வதாகவும் சிலர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். இவை எல்லாம் நேபாளத்தில் மூலிகையைத் தேடி மக்கள் சென்றனர் என்று வெளியான வீடியோவுக்குப் பிறகே பதிவிடப்பட்டிருந்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நேபாளத்தில் மூலிகை ஒன்றைத் தேடி மக்கள் கூட்டமாக மலையேற்றம் செய்த வீடியோவை இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலை விட்டு ஓடும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply