
அரிசியில் திட்டமிட்டு கலப்படம் செய்யும் வட இந்தியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அரிசி ஆலை ஒன்றில் இளைஞர்கள் அரிசியில் ஏதோ ஒன்றை ஊற்றிக் கலக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் மொழி என்ன என்று அறிய முடியவில்லை. நிலைத் தகவலில், “வட இந்தியர்களின் திட்டமிட்ட கொடூர செயல் !! அரிசியை சமைத்து சாப்பிடும் மக்களின் உடல் நலத்தை குறிவைத்து தகர்க்கும் முயற்சியில் வட இந்தியர்கள்…!! உடனே தடுத்தாக வேண்டும் !!ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை பகிரவும் … அல்லது நமது உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்தப் சுகாதார பொறுப்பற்ற செயலை நீதிமன்றம் தண்டிக்குமா அல்லது கண்டும் காணாமலும் நீதி தேவதையின் கண்களைக் கட்டிக்கொள்ளுமா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை AbdulHakkim என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நர் 2021 அக்டோபர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அரிசி சாப்பிடும் மக்களின் உடல் நலனைக் கெடுக்க, வட இந்தியர்கள் அரிசியில் கலப்படம் செய்கின்றனர் என்று பதிவிடப்பட்டுள்ளது. இவர்கள் வட இந்தியர்கள் என்று எதன் அடிப்படையில் முடிவுக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் பேசும் மொழி இந்திய மொழிகள் போல இல்லை. இளைஞர்களும் இந்தியர்கள் போல இல்லை. சிலரைப் பார்க்கத் தென் அமெரிக்க நாடுகளைச் சார்ந்தவர்கள் போல இருந்தனர்.
வட இந்தியர்கள் கலப்படம் செய்கிறார்கள் என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். யூடியூபிலும் அரிசியில் கலப்படம் செய்யும் வட இந்தியர்கள் என்று இந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. பல்வேறு தேடலுக்குப் பிறகு ஸ்பானிஷ் மொழியில் பதிவிடப்பட்ட யூடியூப் வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது.
அந்த வீடியோவில் லாம்பேயேக்யூவில் (Lambayeque) உள்ள La Caserita D El Aguila S.R.L. என்ற அரிசி விற்பனை செய்யும் நிறுவனத்தில் தொழிலாளிகள் அரிசியை சுகாதாரமற்ற முறையில் கையாளும் காட்சி என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோ 2018ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
Lambayeque எங்கு உள்ளது என்று பார்த்தோம். அது வடக்கு பெருவில் உள்ள ஒரு நகரம் என்று தெரியவந்தது. அங்கு, La Caserita D El Aguila S.R.L. என்ற நிறுவனத்தின் பெயரில் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்று பார்த்தோம். அப்போது அந்த பெயரில் அரிசி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Facebook
இந்த வீடியோ அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில்தான் எடுக்கப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது என்று பார்த்தோம். அப்போது, இளைஞர் ஒருவர் அரிசியை மூட்டையில் நிரப்பி, தையல் போடும் காட்சியில் மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள படத்தைப் பார்க்க முடிந்தது. அதுவும் La Caserita D El Aguila S.R.L. அரிசி மூட்டை பையில் இருந்த படமும் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் இது பெரு நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியாகிறது.

அரிசியில் என்ன பொருளைக் கலப்படம் செய்கிறார்கள், இவர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், இவர்கள் அரிசி பளபளப்பாக இருக்க எண்ணெய் கலப்பதாக கமெண்ட் பகுதியில் ஒருவர் பதிவிட்டிருந்தார். வீடியோவில் உள்ள நபர் அதிக பளபளப்புக்காக எண்ணெய் கலக்கப்படுகிறது என்று கூறுகிறார் என்று அவர் தெரிவித்திருந்தார். மற்றபடி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எந்த ஒரு தகவலும் செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
கலப்பட அரிசியை தவிர்ப்போம் என்று கூறி இந்த வீடியோவை பெரு நாட்டைச் சேர்ந்த சிலர் பதிவிட்டு வந்திருப்பதையும் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில், பெரு நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து வந்து அரிசியில் கலப்படம் செய்யும் வட இந்தியர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அரிசியில் கலப்படம் செய்யும் வட இந்தியர்கள் என்று பரவும் வீடியோ பெரு நாட்டில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அரிசியில் கலப்படம் செய்த வட இந்தியர்கள்?- வீடியோ செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
