"மோடியின் உருவ பொம்மையை எரித்த மக்கள்" என்று பரவும் வீடியோ உண்மையா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Electronic voting machine) முறைகேடு செய்ததற்காக நரேந்திர மோடி உருவ பொம்மையை எரித்த வட இந்திய மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: X Post I Archive I Facebook
தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் எரிக்கப்படும் அசுரன் பொம்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைத்து எரித்ததாக வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தசரா பண்டிகையில் சூரசம்கார விழா.. EVM ஹேக் பண்ண ராவணனை வைத்து தசரா பண்டிகையை கொளுத்தி விளையாண்ட வட மாநில மக்கள்... 🔥😂 எல்லாருமே வெறுப்பா இருந்தா அப்ப யாருதான்டா இவனுங்கள ஜெயிக்க வைக்கிறது?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலும் காங்கிரஸ் கட்சி தான் முன்னிலையிலிருந்தது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாக காங்கிரஸ் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இ.வி.எம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்த மோடியின் உருவ பொம்மையை கொளுத்திய வட இந்தியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது பார்த்து வருகிறோம். எனவே, இந்த சம்பவம் இப்போது நடந்தது இல்லை என்பது நமக்குத் தெரியும். இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டில் இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான விவசாய சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் மோடியின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவல் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது, பஞ்சாப் மாநிலம் மால்வா (Malwa) பகுதியில் விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை ராவணன் உருவ பொம்மையாக சித்தரித்து, அதை எரித்தனர் என்று வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்ததற்கு பாஜக தரப்பிலிருந்து கண்டனம் தெரிவித்த செய்தியும் நமக்குக் கிடைத்தது. இவை எல்லாம் இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.
உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive
நம்முடைய ஆய்வில், 2020ம் ஆண்டு விவசாய சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடியதன் வீடியோவை 2024ல் இவிஎம் முறைகேட்டை கண்டித்து நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடியதாக தவறாகப் பகிர்ந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இவிஎம்-ல் முறைகேடு செய்த மோடி என்று கூறி அவரது உருவ பொம்மையை வட இந்தியர்கள் எரித்தார்கள் என்று பரவும் வீடியோ 2020ம் ஆண்டு விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram