கோவிலில் பெண்ணின் நகை பறிப்பு வீடியோ தமிழகத்தை சார்ந்ததா?
தமிழக கோவில் ஒன்றில் பெண் ஒருவரின் நகையைத் திருடன் பறித்துச் சென்ற காட்சி என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook
கோவிலில் பெண்கள் பஜனை பாடல்களைப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அப்போது ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண் திடீரென்று கழுத்தைப் பிடித்துக் கொண்டு எழுகிறார். அவரது நகையை யாரோ ஜன்னலுக்கு வெளியே இருந்து திருடிச் சென்றிருப்பது தெரிகிறது. நிலைத் தகவலில், "திருடர்கள் ஆட்சி நடத்தும் திராவிட மாடலில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு. இனிமேல் நிம்மதியாக கூட வீட்டு விழாக்களில் பங்கு கொள்ள இயலாது போல !!!!!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் கோவிலுக்குள்ளேயே பெண்ணின் நகை திருடப்பட்டிருப்பதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை முழுவதுமாக பார்த்தாலே இந்த வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அந்த பெண்கள் கன்னடத்தில் பேசுவது தெளிவாகக் கேட்கிறது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com
முழு வீடியோவை பார்க்கும் போது, கோவிலுக்குள் உள்ள அறிவிப்பு பலகையில் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் தெரிந்தும், மறைக்கக் கூடாததை சௌகரியமாக மறைத்து தமிழ்நாட்டில் நடந்ததாக வதந்தி பரப்பியுள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டை கூறியே தீர வேண்டும் என்ற நோக்கில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெரிகிறது. எனவே, இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் சமீபத்தில் பெங்களூருவில் நடந்ததாக பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அக்டோபர் 10, 2024 அன்று இந்த சம்பவம் நடந்ததாக இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிலுக்குள் இருந்த பெண்ணிடம் இருந்து 30 கிராம் தங்க நகை திருடப்பட்டதாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I timesnownews.com I Archive 2
டைம்ஸ் நவ் வெளியிட்டிருந்த செய்தியில் இந்த சம்பவம் பெங்களூரு சங்கர் நகர், மகாலட்சுமி லேஅவுடில் உள்ள விநாயகர் கோவிலில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
பெங்களூரு கோவிலில் நடந்த சம்பவத்தை தமிழகத்தில் கோவிலில் வழிபட்டுக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை திருடிச் சென்ற திருடன் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel