
வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி சென்ற போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கதவுக்கு அருகே நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோவ் கதவ திறயா..! நான் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கே!🤣 பொத்திகிட்டு வெளியே நில்லுயா உன்ன உள்ளே விடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கலின் போது நடந்தது…!!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதையொட்டி 2024 அக்டோபர் 23ம் தேதி அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அறைக்குள் அனுமதிக்காமல், வெளியே நிப்பாட்டி அவரை அவமரியாதை செய்ததாக ஆளுங்கட்சித் தரப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலும், உள்ளே விட மாட்டோம் என்று கூறி அவரை வெளியே நிப்பாட்டியதாக தகவல் பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருபவர்களின் எண்ணப்படி, வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திற்குள் எல்லோரும் சென்றுவிட முடியாது. வேட்பாளருடன் எத்தனை பேர் உள்ளே செல்லலாம் என்ற விதிமுறைகளை எல்லாம் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. பிரதமராக இருந்தாலும் கூட யாரும் அந்த விதிமுறைகளை மீற முடியாது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கேரளாவுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியின் இணையதளத்தில் எத்தனை பேர் உள்ளே செல்ல முடியும் என்ற விதிமுறையைத் தேடி எடுத்தோம். அதில், வேட்பாளருடன் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைப் பதிவைக் காண: ceo.kerala.gov.in I Archive
நான்கு பேர் மட்டுமே உடன் இருக்க முடியும் என்ற நிலையில் பிரியங்கா காந்தி தன்னுடைய கணவர், மகன், சகோதரர், அம்மா, கட்சித் தலைவர் கார்கே, மூத்த நிர்வாகி வேணுகோபால் என அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக வெளியே அனுப்பி, உள்ளே வரவைத்து வேட்பு மனுத் தாக்கலைச் செய்து முடித்துள்ளதை ஏஎன்ஐ வெளியிட்ட வீடியோ மூலம் காணலாம். முதலில் பிரியங்கா காந்தியுடன் அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகனுடன் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து சோனியா காந்தி உள்ளே வந்து இரண்டாவது வரிசையில் அமர்கிறார். பின்னர், மல்லிகார்ஜுன கார்கே உள்ளே வருகிறார். இதன் மூலம் உள்ளே நான்கு பேர் என்ற அதிகபட்ச எண்ணிக்கை வருகிறது. உடன், பிரியங்காவின் கணவரும், மகனும் வெளியே செல்கின்றனர்.
மல்லிகார்ஜுன கார்கே 2வது வரிசையில் அமர செல்ல, பிரியங்கா காந்தி முதல் வரிசைக்கு வரும் படி அழைக்கிறார். அவரும் முதல் வரிசையில் வந்து அமர்கிறார். மல்லிகார்ஜுன கார்கே வரும் போது சோனியா காந்தியும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கிறார். அந்த நேரத்தில் ராகுல் காந்தியும் அறைக்குள் வருகிறார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளே வருகிறார். வேணுகோபால் வெளியே சென்றதும் வேறு ஒரு தலைவர் வந்து பிரியங்கா காந்தி அருகில் அமர்கிறார். இப்படித் தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறாமல் தலைவர்கள், குடும்பத்தினர்கள் மாறி மாறி தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திற்குள் வந்து சென்றதைக் காண முடிகிறது.
தேர்தல் ஆணைய விதிமுறையை மனதில் வைத்து, இந்த வீடியோவை பார்க்கும் போது எந்த தவறும் நடந்தது போன்று தெரியவில்லை. இரண்டாவது வரிசையில் அமரச் சென்ற மல்லிகார்ஜுன கார்கேவை முதல் வரிசையில் அமரவைத்தார் பிரியங்கா காந்தி. பின்னர் தன்னுடைய நாற்காலியில் சோனியா காந்தியை அமர வைத்துவிட்டு 2வது வரிசைக்குச் செல்கிறார் கார்கே. அவரை மீண்டும் முதல் வரிசையில் உள்ள வேறு ஒரு நாற்காலியில் அமர ராகுல் காந்தி அழைக்கிறார். கையைப் பிடித்து இழுக்கிறார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது தெரிகிறது.
உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive
நம்முடைய ஆய்வில் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய செல்லும் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறை இருப்பதற்கான ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்கள் வெளியே நின்ற மல்லிகார்ஜுன கார்கே பின்னர் வேட்பு மனுத் தாக்கல் நிகழ்ச்சி முடியும் வரை உடன் இருந்ததும் வீடியோ ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரியங்கா காந்தி வேட்பு மனுத் தாக்கலின் போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் போது வேட்பாளரைச் சேர்ந்து ஐந்து பேர் தான் உடன் இருக்க வேண்டும் என்ற விதிமுறை படி பொறுமையாக தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திற்குள் மல்லிகார்ஜுன கார்கே சென்ற நிலையில், அவர் வாசலிலேயே தடுத்த நிறுத்தப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தவறானது என்று தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel I Instagram

Title:பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின் போது மல்லிகார்ஜுன கார்கேவை அனுமதிக்கவில்லையா?
Fact Check By: Chendur PandianResult: False
