டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக மாற்றுவதற்காக, இஸ்லாமியர்கள் அந்த போராட்டத்தில் ஊடுருவியுள்ளனர் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர்களுக்கு டர்பன் கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 19ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ஏன் மூர்க்கத்தனமாக இருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.எல்லாம் மர்ம நபர்கள் (முஸ்லிம் கை கூலியாட்கள்) செய்யும் வேலைகள் தான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தவறானது என்று காட்ட சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்கள் போல தலைப்பாகை அணிந்து இஸ்லாமியர்கள் அதிக அளவில் கலந்துகொண்டுள்ளனர் என்று சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருந்தால் இவ்வளவு வெளிப்படையாகவா வீடியோ பதிவு செய்வார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த வீடியோ 2022ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி இந்த வீடியோவை Sardarian Trust Punjab - ਸਰਦਾਰੀਆਂ ਵਾਲੇ என்ற ஃபேஸ்புக் பக்கம் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. பஞ்சாபியில் எழுதப்பட்டிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். "மூஸ்வாலாவின் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து, இஸ்லாமிய சகோதரர்களுக்கு சீக்கிய தலைப்பாகை கட்டப்பட்டது" என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இதன் அடிப்படையில் தேடிய போது சில செய்திகள் நமக்குக் கிடைத்தன. பிரபல பஞ்சாபி இசைக்கலைஞர் சுப்தீப் சிங் மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்க பலரும் வந்திருந்தனர். சீக்கியர்கள் போன்று தலைப்பாகை கட்ட ஐந்து இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. அதிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று சித்து மூஸ்வாலாவின் புகைப்படத்துடன் கூடிய பேனரைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: etvbharat.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ முதன் முதலில் 2022ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி மூஸ்வாலாவின் இறுதிச் சடங்கு நடந்த போது சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் 2024 பிப்ரவரியில் தொடங்கியது. போராட்டத்துக்குக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஊடுருவியுள்ளனர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஊடுருவியுள்ளனர் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஊடுருவல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False