ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

சமூக ஊடகம் | Social

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று புதிய தலைமுறை வௌியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், “யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஆம்ஸ்ட்ராங், அடிப்படையில் குற்றவாளி. ஆள் கடத்தல், கொலை முயற்சி, ரவுடியிசம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஆம்ஸ்ட்ராங் மீதான 7 வழக்குகள் விபரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது என்ன என்ன சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீண்ட பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் 2024 ஜூலை 5ம் தேதி சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் வட சென்னையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த படுகொலையை பலரும் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் குற்றவாளி என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டது போன்று பலரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு போலத் தெரிகிறது. இருப்பினும், ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டு, வட சென்னையில் கொந்தளிப்பான சூழல் நிலவும் நிலையில் ஊடகம் ஒன்று இப்படி செய்தி வெளியிட வாய்ப்பில்லை என்பதால் இது போலியானது என்று நமக்குத் தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்த்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போல வேறு ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஆம்ஸ்ட்ராங் அடிப்படையில் வழக்கறிஞர்” என்று இருந்தது. மேலும் அவரது வாழ்க்கை, அரசியல் பயணம் பற்றிய தகவலை அந்த நியூஸ் கார்டில் குறிப்பிட்டிருந்தனர். இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பினோம். உடனே அவர் இது போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தார். மேலும், சிறிது நேரத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று எங்கள் இணையதளத்தில் பதிவிடுகிறோம் என்று கூறி, அப்படி பதிவிட்டதும் அதை நமக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அடிப்படையில் ஒரு குற்றவாளி என்று பரவும் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Written By: Fact Crescendo Team 

Result: False