தெலுங்கு புத்தாண்டுக்கு திருப்பதியில் தரிசனம் செய்த சீமான் என்று பரவும் படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெயர் தெரியாத ஊடகம் ஒன்றில் வெளியானது போன்று சீமான் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திருப்பதியில் சீமான் சிறப்பு தரிசனம். தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “வடுக வந்தேறிகள் வரிசையில் வரவும் !?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை தாமோ சிவகுமார் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 22ம் தேதி பதிவிட்டுள்ளார்.

Archive

இதே போன்று உகாதிக்கு மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சீமான் என்று இந்த படத்தை ட்விட்டரிலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதையும் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடும் வகையில் திருப்பதிக்கு சென்று வழிபாடு நடத்தினார் என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ஆதாரமாகப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். திருப்பதி என்பது வைணவக் கோவில். அங்கு பட்டை போட்டபடி பலரும் இருப்பது புகைப்படத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: samayam.com I Archive

புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தைத் தமிழ் சமயம் என்ற ஊடகம் 2022 செப்டம்பர் 3ம் தேதி வெளியான செய்தியில் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. திருப்போரூரில் தமிழ் வழி வழிபாட்டினை சீமான் தொடங்கிவைத்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக செய்தி படிக்கும் போது தெரிந்தது.

எனவே, சீமான், தமிழ் வழி வழிபாடு, திருப்போரூர் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது தந்தி டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியான வீடியோ செய்தியும் நமக்கு கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தின் காட்சிகளை, நபர்களைக் காண முடிந்தது. எனவே, இந்த புகைப்படம் 2023 உகாதி விழாவின் போது திருப்பதியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவானது.

உகாதியையொட்டி சீமான் திருப்பதிக்கு சென்றாரா என்று அறிய அக்கட்சியின் நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரோ, இந்த தகவல் தவறானது, மார்ச் 22ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதிக்கு சென்றார் என்று தெரிவித்தார். 

Archive

சீமானின் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் அகிலி என்ற ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்வையிட்டதாகப் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் திருப்பதி சென்றதாக பரவும் தகவலும் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2023 உகாதி தெலுங்கு புத்தாண்டு பிறப்புக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் வழிபாடு செய்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தெலுங்கு புத்தாண்டுக்கு திருப்பதியில் தரிசனம் செய்த சீமான் என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False