கொலுசு கொடுத்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்தப் போகிறேன் என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

உள்ளாட்சித் தேர்தலின் போது மக்களுக்குக் கொலுசு கொடுத்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமைச்சர் செந்தில் பாலாஜி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொலுசு கொடுத்ததால் மின்சாரம் விலையேற்றம். கோவை மாநகராட்சி தேர்தலின் போது மக்களுக்கு கொலுசு மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுத்த காரணத்தால் டாஸ்மாக் மற்றும் மின்சார கட்டண உயர்வை தவிர்க்க இயலாது. எனவே, மக்கள் இந்த கட்டண உயர்வை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி” என்று இருந்தது. இந்த பதிவை Vijay Karthik என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தேர்தலில் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது மிகப்பெரிய குற்றம். அதை அரசியல் கட்சிகள் செய்கின்றன. அது தொடர்பான சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் இங்கு, மின்சார கட்டணம், மது விலையை உயர்த்தி தேர்தலின் போது தாங்கள் செய்த செலவைத் திரும்பப் பெறப் போவதாக அமைச்சர் கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பார்க்கவே போலி என வெளிப்படையாக தெரிந்தாலும், இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் வழக்கமாகத் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. இப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, முதலில் தந்தி டிவி இப்படி ஏதும் நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. இதை உறுதி செய்ய தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.

இதன் அடிப்படையில் கோவை மாநகராட்சித் தேர்தலில் பரிசுப் பொருட்கள் கொடுத்ததால் மது மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோவை மாநகராட்சி தேர்தலில் வாக்குகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கியதால் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கொலுசு கொடுத்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்தப் போகிறேன் என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False