மு.க.ஸ்டாலின் சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினாரா?
இந்தியாவின் கடனை அடைக்க மு.க.ஸ்டாலின் சொத்துகளை தேசியமயமாக்கி, அவற்றை ஏலத்தில் விற்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஏபிபி நாடு இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "இந்தியாவின் கடனை அடைக்க ஸ்டாலினின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்; அவற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை Ari Vazhagan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 12ம் தேதி பதிவிட்டிருந்தார்.
ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்களிலும் கூட அதிக அளவில் இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்திருந்தார். அப்போது அண்ணாமலை யார், தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் ஸ்டாலின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் கூறியதாக சமூக ஊடகங்களில் சிலர் நியூஸ் கார்டு ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.
ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டு இது. ஸ்டாலின் என்பது கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். ஸ்டாலின் சொத்துக்களை தேசியமயமாக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினாரா... அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதானி சொத்துக்களை தேசியமயமாக்க வேண்டும் என்று அவர் கூறியதாக செய்தி கிடைத்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே காட்டிக்கொடுக்கின்றன. ஏபிபி நாடு ஊடகம் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். 2023 பிப்ரவரி 9 அன்று இந்த நியூஸ் கார்டை ஏபிபி நாடு ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், "அதானியின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது போலியானது என்பதை உறுதி செய்ய நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை ஏபிபி நாடு பொறுப்பாளருக்கு வாட்ஸ்அப்-ல் அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஸ்டாலின் சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
இந்தியாவின் கடனை அடைக்க மு.க.ஸ்டாலினின் சொத்துக்களை கைப்பற்றி ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மு.க.ஸ்டாலின் சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினாரா?
Written By: Chendur PandianResult: False