
ஏழு வருடங்கள் பா.ஜ.க ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு. ஏழு வருடங்கள் பாஜக ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டு பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 29 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த போது, 75 நாட்களிலேயே தி.மு.க அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்று பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் அதை மாற்றி மத்திய பா.ஜ.க அரசை அண்ணாமலை விமர்சித்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக பா.ஜ.க அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அண்ணாமலை அறிவித்த நிலையில், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக அவர் பேட்டி அளித்தது போன்று ஒரு தவறான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதை பார்க்கும் போதே போலியானது என்று தெரிகிறது. இருப்பினும் இதையும் பலரும் ஷேர் செய்து வரவே, இது போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.

அசல் பதிவைக் காண: dinamani.com I Archive
திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. தினமணி வெளியிட்டிருந்த செய்தியை ஆதாரமாக நாம் எடுத்துக்கொண்டோம். அந்த செய்தியில் அவர் தமிழ்நாடு தி.மு.க அரசை மட்டுமே விமர்சித்திருந்தார். மத்திய பா.ஜ.க அரசு பற்றி அவர் கூறவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள முடிந்தது.
அடுத்ததாக அந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். அப்டேட் நியூஸ் 360 என்ற ஊடகம் பெயரில் நியூஸ் கார்டு இருந்தது. எனவே, அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தைத் தேடிப்பிடித்து, அதில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அப்போது, ஜூலை 28ம் தேதி அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டை அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், “ஆட்சி மீது வெறுப்பு. 75 நாட்கள் தி.மு.க ஆட்சியை பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நியூஸ் கார்டை எடுத்து 75 நாள் தி.மு.க அரசு என்பதை மாற்றி, 7 வருட பா.ஜ.க ஆட்சி என்று மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது!
முடிவு:
மத்திய பா.ஜ.க அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மோடி அரசை விமர்சித்து அண்ணாமலை பேசியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
