தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "உள்ளாட்சித் தேர்தல் தேதி தேர்தல் முடிவு நாள் ஜன.4, வார்டு உறுப்பினர் பதவியேற்பு ஜன.6, மேயர் தேர்வுக்கு மறைமுகத் தேர்தல் ஜன.11. தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: டிச.27 மற்றும் 30ல் தேர்தல் நடக்க உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இறங்கியது என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது போல பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால் அது பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும். ஊடகங்கள் யாருக்கும் தெரிவிக்காமல் இப்படி அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதால் இந்த தகவல் தவறானது என்பது தெளிவாகிறது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ள தகவலை அப்படியே டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில்தான், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2024 டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

அடுத்ததாக நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்திற்குச் சென்று "தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: டிச.27 மற்றும் 30ல் தேர்தல் நடக்க உள்ளது" என்று டைப் செய்து தேடினோம். அப்போது, "Breaking News : டிசம்பர் 27, 30-ல் உள்ளாட்சித் தேர்தல் | TN By Election 2019 Dates" என்று தலைப்பிட்டு டிசம்பர் 2, 2019ல் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், 8.28வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்பட காட்சி அப்படியே இருந்தது. இதன் மூலம் 2019ம் ஆண்டு வௌியான செய்தியை புகைப்படம் எடுத்து, 2024ல் அறிவிக்கப்பட்டது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ல் நடைபெறும் என்று 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு செய்தியை 2024ல் வெளியான அறிவிப்பு போல சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False