
‘’எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைத்த பணம், தங்கம்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
கடந்த 2018 ஜூலை 21 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எடப்பாடி_பழனிசாமியின் #பினாமி #செய்யாதுரை வீட்டில் கட்டி கட்டியாக நூறு கிலோ தங்கமும்,கரன்சி கட்டுகளும் தோண்ட தோண்ட அலிபாபா குகையில் இருந்து வருவது போல் IT ரெய்டில் எடுக்குறானுங்க……. #தந்திNews7_புதியதலைமுறைNews18,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் இன்றளவும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில், இவர்கள் சொல்வது போல நெடுஞ்சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜன் செய்யாதுரை என்பவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டதா என விவரம் தேடினோம். அப்போது, கடந்த 2018 ஜூலை மாதம் இதுபோன்ற சோதனை நிகழ்ந்ததாகச் செய்திகள் கிடைத்தன.
News18 Link I TheNewsMinute Link I TimesNowNews Link
இதன்படி, கடந்த 2018 ஜூலை 17 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி சுப்ரமணியன் பழனிச்சாமி இயக்குநராகச் செயல்படும் Ms SPK என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் கணக்கில் வராத நிறைய பணம், தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. Ms SPK நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நாகராஜன் செய்யாதுரை என்பவர் ஆவார். இவர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி என்றும் அப்போது ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
எனினும், இந்த சோதனை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் முற்றிலும் வேறு ஒன்றாகும்.
ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்கள் வேறாக உள்ளன. அவற்றை பற்றி நாம் ஆய்வு செய்தபோது, அவை ஏற்கனவே சசிகலா வீட்டில் எடுக்கப்பட்டவை என்று கூறி சில ஆண்டுகளாகவே இணையத்தில் பரவி வருவதைக் கண்டோம்.
ஆனால், இவை சசிகலா வீட்டில் இருந்தோ அல்லது நாகராஜன் செய்யாதுரை வீட்டில் இருந்தோ எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல.
உண்மையில், குழி தோண்டி கொள்ளையடிக்கப்பட்ட புகைப்படம் நவி மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை ஒன்றில் கடந்த 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
BBC Link I HindustanTimes Link I IndianExpress Link
இதேபோல, அட்டைப் பெட்டிகளில் பணம் இருக்கும் புகைப்படம் 2017ம் ஆண்டு தேசிய பங்குச்சந்தை புரோக்கர் சஞ்சய் குப்தா வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையின்போது எடுக்கப்பட்டதாகும்.
இதேபோல, தங்கக் கட்டிகள் உள்ள புகைப்படமும் கடந்த சில ஆண்டுகளாகவே, இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும். அதுவும் இந்த நாகராஜன் செய்யாதுரை வருமான வரிச் சோதனையுடன் தொடர்பில்லாத ஒன்றாகும்.
எனவே, செய்திக்கு தொடர்பில்லாத புகைப்படங்களை பகிர்ந்து, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா?- உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
