
‘’விவசாயிகள் ஆதரவு போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பாஜக நபருக்கு அடி உதை,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
Facebook Claim Link 4 | Archived Link 4 |
இதில், ஒருவரை விவசாயிகள் சூழ்ந்துகொண்டு தாக்குவதைப் போலவும், பின்னர் அவரை போலீசார் கைப்பற்றி இழுத்துச் செல்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்டதால், அந்த நபரை விவசாயிகள் தாக்கினர் என்றும், அவர் ஒரு பாஜக ஆதரவாளர் என்றும் தகவல் பகிரப்படுகிறது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை நாம் உற்று கவனித்தபோது, அதில் எங்கேயும் ‘’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’’ என்ற கோஷம் இடம்பெறவில்லை. இதுதவிர, அதில், ‘’Neta Banao Isko’’ என இந்தியில் பேசுகின்றனர். இதற்கு அர்த்தம், ‘’Make him a leader,’’ என ஆங்கிலத்தில் வருகிறது. இதற்கும், பாகிஸ்தான் ஆதரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இது தவிர, இந்த வீடியோவை, பாரத் சமாச்சார் ஊடகம் (BSTV) ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அவர்கள் காசியபாத் பகுதி போலீசை டேக் செய்து, ‘’போராட்டத்தில் பங்கேற்ற நபரை விவசாயிகள் தாக்கியுள்ளனர். ஊடகங்களிடம் அவர் பேட்டி அளித்ததற்காக தாக்கப்பட்டுள்ளார். அருண் என்ற அந்த டெல்லியை சேர்ந்த நபரை விவசாயிகள் தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. டெல்லி எல்லையில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பதிவை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இதன் பேரில், காசியாபாத் பகுதி போலீசாரை தொடர்பு கொண்டு விளக்கம் பெற தீர்மானித்தோம். இதன்படி, நமது ஃபேக்ட் கிரஸண்டோ குழுவினர், காசியாபாத் போலீசாரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது, KODA Police station SHO – Mohammad Aslam இந்த தகவலை பார்வையிட்டு, விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில்,‘’குறிப்பிட்ட வீடியோ Kondly போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. அதில் தாக்கப்படும் நபரின் பெயர் அருண் குமார். அவர், Vaishali Suraksha Udhyam எனும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். விவசாயிகள் போராட்டத்திற்கு இடையே புகுந்த அவர், அங்கிருந்த Republic Bharat ஊடகத்தினரிடம் தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னை நேர்காணல் செய்யும்படி அவர் தொடர்ந்து பேசியதால், அங்கிருந்த விவசாயிகள், அவரை தாக்கி அப்புறப்படுத்தினர். அவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல,’’ என்று குறிப்பிட்டார்.
எனவே, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பாஜக நபர், எனும் தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பாஜக நபர்?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
